கார்கிலில் தோற்றது நியாபகம் இருக்கா? தவான் பதிலடி..வாங்க டீ குடிக்கலாம் என மீண்டும் சீண்டிய அப்ரிடி
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, இந்தியாவை விமர்சனம் செய்திருந்தார். ‛இந்தியாவே பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி சொந்த மக்களை கொன்றுவிட்டு, பாகிஸ்தான் மீது பழியை போடுகிறது'' என்று கூறியிருந்தார். இதற்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கார்கில் போரை நினைவுப்படுத்தி சுளீர் பதிலடி கொடுத்த நிலையில் மீண்டும் ஷாகித் அப்ரிடி Fantastic Tea என்று சீண்டி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குலை தொடுத்தனர். இதில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கியது இந்த சம்பவம்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு இன்னும் நம் நாடு பதிலடி கொடுக்கவில்லை. விரைவில் பதிலடி கொடுக்க உள்ளது.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த முப்படைகளுக்கும் நேற்று பிரதமர் மோடி சுதந்திரம் வழங்கினார். இதனால் விரைவில் நம் படை வீரர்கள் பாகிஸ்தானை பதம் பார்க்க உள்ளனர். இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி நம் நாட்டை குற்றம்சாட்டியிருந்தார்.
இதுபற்றி ஷாகித் அப்ரிடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காஷ்மீரில் 8 லட்சம் பேரை கொண்ட ராணுவம் இருந்தும் தாக்குதலை தடுக்க முடியவில்லை என்றால், ராணுவம் பயனற்றது. ஒரு மணி நேரமாக பயங்கரவாதிகள் மக்களை கொன்றபோதிலும், 8 லட்சம் பேரில் ஒருவர் கூட அங்கு வரவில்லை, ஆனால் பாகிஸ்தானை மட்டும் குறை சொல்கிறார்கள்.இந்தியாவே பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி சொந்த மக்களை கொன்றுவிட்டு, பாகிஸ்தான் மீது பழியை போடுவதாகவும், பாகிஸ்தான் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை ஆதரிக்காது" என்றார்.
பாகிஸ்தான் தான் மொத்த உலக நாடுகளுக்கும் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. ஆனால் அந்த புரிதல் கூட இன்றி ஷாகித் அப்ரிடி இந்த கருத்தை தெரிவித்தார். இதனால் பலரும் கொதித்து போயினர். குறிப்பாக நம் நாட்டை சேர்ந்தவர்கள் ஷாகித் அப்ரிடியை விளாசி தள்ளினர்.
இதற்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உரிய பதிலடியை கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கார்கில் போரில் நாங்கள் உங்களைத் தோற்கடித்தோம். நீங்கள் ஏற்கனவே நிறைய வீழ்ந்துவிட்டீர்கள். இன்னும் எவ்வளவு வீழ்வீர்கள். பயனற்ற கருத்துக்களை தெரிவிப்பதற்கு பதிலாக உங்கள் எண்ணத்தை உங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துங்கள். எங்கள் இந்திய ராணுவத்தை பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். பாரத் மாதா கி ஜெய்! ஜெய் ஹிந்த்!" என்று கூறியுள்ளார்.
ஷிகர் தவானின் இந்த பதிலடிக்கு ஷாகித் அப்ரிடி, ‛‛வெற்றி-தோல்வியை ஒதுக்கி வைப்போம். வாங்க.. கொஞ்சம் தேநீர் அருந்தலாம், ஷிகர். #FantasticTea" என பதிவிட்டு மீண்டும் சீண்டி உள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் இந்தியாவை சீண்டி உள்ளார். அதாவது கடந்த 2019 ம் ஆண்டில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து நம் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது விமானப்படையின் விங்க் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். இதையடுத்து அவருக்கு டீ வழங்கி எப்படி இருக்கு? என்று கேட்டனர். அதற்கு அவர் Fantastic என்று கூறினார்.
இதனை நினைவுக்கூறும் வகையில் ஷாகித் அப்ரிடி சீண்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications