குஜராத் கடற்பகுதியில் பிடிபட்ட பாகிஸ்தான் படகு.. 400 கோடி மதிப்பிலான 77 கிலோ ஹெராயின் சிக்கியது
டெல்லி: குஜராத் கடற்பகுதியில் இருந்த பாகிஸ்தான் நாட்டிற்குச் சொந்தமான படகில் இருந்து சுமார் ரூ 400 கோடி மதிப்பிலான 77 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை இந்தியக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பகுதியின் மூலம் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகக் கடந்த சில காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இந்தச் சூழலில் பாகிஸ்தான் நாட்டிற்குச் சொந்தமான படகின் மூலம் பல கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

பாகிஸ்தான் படகு
இந்தத் தகவலின் அடிப்படையில் இந்தியக் கடலோர காவல் படையினரும், குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படையினரும் இணைந்து திங்கள்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குஜராத் மாநிலத்திற்கு ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது சுமார் 35 கடல் மைல் தொலைவில் அல் ஹூசைனி என்ற பெயருடைய படகு ஒன்று குஜராத் கடற்பகுதிக்குள் வருவதைக் கடலோர பாதுகாப்புப் படையினர் கவனித்துள்ளனர்.

400 கோடி ரூபாய்
இதையடுத்து, அந்தப் படகைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், அந்த படகில் சோதனை செய்த போது அதில் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் ஆகும். மேலும், அந்த படகில் இருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்..

யார் அவர்கள்
இதையடுத்து அவர்களைக் குஜராத்தின் ஜகு கடற்கரைக்கு அழைத்து வந்துள்ள பாதுகாப்புப் படையினர், அடுத்த கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த படகு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து கிளம்பியுள்ளதாகவும் குறிப்பிட்ட ரேடியோ சிக்னல் மூலம் அவர்கள் சிலரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளதாகவும் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதாவது கராச்சி துறைமுகத்தில் இருந்து 6 மைலுக்கு அப்பால் வந்த பிறகு, இந்த ஹெராயின் போதைப்பொருள் அந்த படகில் ஏற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப் தாதா
பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர் ஹாஜி ஹசன் மற்றும் ஹாஜி ஹாசம் ஆகியோரை இந்த போதைப்பொருளை அனுப்பியுள்ளனர். பஞ்சாபில் இருக்கும் சில நிழல் உலக தாதாவுக்கு இந்த போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் போதைப் பொருள் கடத்தும் பாகிஸ்தான் படகை இந்தியக் கடற்படை பிடிப்பது இது முதல் முறை இல்லை.

முதல்முறை இல்லை
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ 300 கோடி மதிப்பிலான 33 கிலோ ஹெராயின் இந்தியக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டது. கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2021 டிசம்பர் வரை மட்டும் இந்தியக் கடற்படையினரால் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 4,600 கோடி மதிப்பிலான 920 கிலோ போதைப் பொருள் பிடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications