இந்தியாவின் டார்கெட் தெளிவா இருக்கு.. ஆனால் அப்பாவி மக்களை குறிவைக்கிறது பாகிஸ்தான்: விங் கமாண்டர்
டெல்லி: "பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து தாக்க முயல்கிறது பாகிஸ்தான்" என விங் கமாண்டர் வியோமிகா சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை இந்தியா முறியடித்து வருகிறது. இன்று அதிகாலையில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அலற விட்டது இந்திய ராணுவம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அப்போது இந்தியாவின் விமானப் படைத் தளங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்து இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வியோமிகா சிங் காட்டினார்.
மேலும், விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், "இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது. தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதிகளான பாரமுல்லா, பூஞ்ச், ரஜௌரி, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. டிரோன்கள் மற்றும் வெடிபொருள்களைக் கொண்டும் தாக்குதலை மேற்கொண்டது பாகிஸ்தான்.
இரு தரப்பிலும் கடுமையான மோதல் ஏற்பட்டு தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் ஆயுதக் கிடங்குகளைத் தாக்கி கணிசமான சேதத்தை இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய விமானப் படைத் தளத்தின் அருகே உள்ள மருத்துவமனைகளை பாகிஸ்தான் தாக்கியது.
மக்கள் வசிக்கும் பகுதியை ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்கியது. அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா துல்லியமாக குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்பில் அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து தாக்க முயல்கிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் அனைத்து விதமான தாக்குதல்களையும் திறம்பட முறியடிக்க இந்தியப் படைகள் தயார் நிலையில் உள்ளன. எல்லைப் பகுதிகளில் போர் பதற்றத்தை அதிகரிக்காமல், பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறோம்" என்று கூறி உள்ளார் வியோமிகா சிங்.
கர்னல் சோஃபியா குரேஷி பேசுகையில், "இந்தியாவை தேவையில்லாமல் சீண்டுகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா தக்க முறையில் முறியடித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. இந்திய விமானப்படை தளங்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications