"அவர் ஒரு லெஜண்ட்.. மெல்லிசை மகாராணி.." லதா மங்கேஷ்கர் மறைவுக்கு.. கலங்கிய பாகிஸ்தான் அமைச்சர்
டெல்லி: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ளது.
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி 8ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென அவருக்கு நிமோனியா தொற்றும் உறுதி செய்யப்பட்டது.

லதா மங்கேஷ்கர் மறைவு
மும்பை மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை லதா மங்கேஷ்கர் காலமானார். 92 வயதான லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இசைத்துறையில் அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாகப் பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

அரைக்கம்பத்தில் தேசியக் கொடி
லதா மங்கேஷ்கரின் மறைவை முன்னிட்டு மத்திய அரசு 2 நாள் துக்க தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்று மாலை மும்பையில் நடைபெறுகிறது. லதா மங்கேஷ்கரின் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள் யாரோடும் ஒப்பிட முடியாதவை எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

இரங்கல்
பிரதமர் மோடி தமது ட்விட்டரில், லதா மங்கேஷ்கர் திரைத்துறைக்கு அப்பால் தேசத்தின் மீதும் பற்று கொண்டிருந்தார். வலிமையான பாரதத்தைக் காண விரும்பியவர். அவரிடமிருந்து ஏராளமான அன்பைப் பெற்றிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி லதா மங்கேஷ்கருக்கு மாலை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல ராகுல் காந்தி, " இந்தியாவின் செல்லக்குரலாகத் திகழ்ந்தவர். லதா மங்கேஷ்கரின் தங்கக் குரலுக்கு அழிவேதும் இல்லை. ரசிகர்களின் மனதில் எப்போதும் லதா மங்கேஷ்கரின் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்" என்றார்.

அமெரிக்கா
லதா மங்கேஷ்கர் பாடல்கள் இந்தியாவைத் தாண்டியும் பல நாடுகளில் பிரபலமானது. இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகம் தனது ட்விட்டரில், "இன்று 92 வயதில் மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து கொள்கிறோம். இந்தியாவின் இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை வரலாறு பொன்னான வார்த்தைகளால் குறிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்
அதேபோல பாகிஸ்தான் தரப்பிலும் அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஒரு லெஜண்ட் இப்போது நம்முடன் இல்லை. லதா மங்கேஷ்கர் மெல்லிசை மகாராணி. பல தலைமுறைகளாக இசை உலகை ஆண்டவர். அவர் இசையின் முடிசூடா ராணி, அவரது குரல் இனி எல்லா காலங்களிலும் மக்களின் இதயங்களை ஆளும்" என்று மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications