குல்பூஷன் ஜாதவின் வாக்குமூலம் பாகிஸ்தான் ஜோடித்தது… சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய இந்தியா
டெல்லி:குல்பூஷன் ஜாதவின் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்றும் அவரது வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்டது என்றும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பணியில் இருந்து விலகி ஈரானில் வர்த்தகம் செய்ய சென்றார். அங்கிருந்து வர்த்தகம் தொடர்பாக பாகிஸ்தான் வந்தபோது, ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அவருடைய மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இன்று தொடங்கி வியாழக்கிழமை வரையில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.அதன் படி.. இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.
இந்திய தரப்பில் மூத்த வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே வாதாடினார். அவர் கூறியதாவது: பாகிஸ்தான் தரப்பு, குல்பூஷன் வழக்கைப் பொறுத்தவரை மிகவும் தவறான தகவல்களை கூறி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், முறையான விசாரணையை மேற்கொள்ள வில்லை. எனவே, குல்பூஷன் ஜாதவை சிறையில் வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது.
ஜாதவ் கைது செய்யப்பட்டது குறித்தோ, வழக்கு விசாரணை குறித்து எவ்வித ஆவணங்களையும் பாகிஸ்தான் பகிர்ந்து கொள்ளவில்லை.தூதரக அதிகாரியுடனான சந்திப்பு குறித்து இந்தியா வலியுறுத்தியும் கூட பாகிஸ்தான் தரப்பு மறுப்பு தெரிவித்துவிட்டது என்றார்.
பாகிஸ்தான் தரப்பில் பிரிட்டன் ராணியின் வழக்கறிஞராக செயல்படும் கவார் குரேஷி ஆஜராகி வாதாட உள்ளார். அவர் தமது வாதத்தை நாளை தொடங்குகிறார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வரும் கோடை காலத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications