மளிகை கடைக்காரருடன் காதல்.. 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்..அடுத்து நடந்த ட்விஸ்ட்
டெல்லி: டெல்லியின் புறநகர் பகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மளிகை கடைக்காரை ஆன்லைன் மூலம் காதலித்த பாகிஸ்தான் பெண், தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து உத்தரப்பிரதேச போலீசார் சிறையில் அடைத்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதாகும் பெண் சீமா ஹைதருக்கு கல்யாணமாகி 4 குழந்தைகள் இருக்கின்றன. சீமா கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்தார். பின்னர் மற்றொருவரை மணந்து கடந்த 2019-ம் ஆண்டு வரை கராச்சி நகரில் வசித்தார்.

ஆனால் 2 வது கல்யாண வாழ்க்கையும் சரியாக அமையவில்லையாம். சீமா ஹைதரின் கணவர் அவரை விட்டு விட்டு சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டாராம். இரண்டு கணவன்களையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சீமா, ஆன்லைன் விளையாட்டான 'பப்ஜி'யில் ஆர்வம் கொண்டு அந்த விளையாட்டை விளையாடி வந்தார். இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா (வயது 25) என்ற இளைஞருடன் அடிக்கடி அவர் பப்ஜி விளையாடி வந்தார். இந்த பழக்கம் காதலாக மாறியது.
டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனா, அந்த பகுதியில் மளிகை கடையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீமா சச்சின் மீனாவை சந்தித்து அவருடன் வாழ விரும்பினார்.ஆனால் இந்தியாவிற்கு நேரடியாக பாகிஸ்தானில் இருந்து வருவது மருத்துவ காரணங்களை தவிர மற்ற காரணங்கள் எளிதானது அல்ல. சரியான முறையில் விசா பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் தங்க முடியும்.
இதனால் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வர சீமா திட்டமிட்டார். இதன்படி சீமா பாகிஸ்தானில் இருந்து சுற்றுலா விசாவில் தனது 4 குழந்தைகளுடன் நேபாள நாட்டுக்கு சென்றார். மளிகை கடைக்காரர் சச்சின் அங்கு சென்று சீமாவை சந்தித்தார். ஒரு வாரம் அவருடன் அங்கு ஒன்றாக தங்கினார்.
பின்னர், இருவரும் திருமணம் செய்துகொண்டு இந்தியாவில் வாழ்வது என முடிவெடுத்தனர். கடந்த மே மாதம், நேபாளத்தில் இருந்து பஸ் மூலமாக கிரேட்டர் நொய்டாவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.
அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து சீமாவை சச்சின் தங்கவைத்துள்ளார். ஆனால் அவர் பாகிஸ்தான் பெண் என்ற தகவல் அக்கம் பக்கம் கசிய தொடங்கியது. இதையடுத்து மத்திய குடியுரிமை அதிகாரிகள், உத்தரபிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படையினருடன், போலீசாரும் அவரை பற்றி ரகசியமாக விசாரித்தனர்.

அதையடுத்து உஷாரான இந்த ஜோடி, 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் இருந்து தப்பி அரியானா மாநிலம் சென்றார்கள். ஆனால் அங்கு அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் சீமா, தனது குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, உரிய அனுமதியின்றி தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து சீமா, அவரின் இந்திய காதலர் சச்சின், அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 3 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 7 வயதுக்குட்பட்ட சீமாவின் 4 குழந்தைகளும் அவருடன் சிறையில் தங்கியிருக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
முன்னதாக பெங்களூருவிலும் இதேபோல் ஒரு பாகிஸ்தான் பெண், நேபாளம் வழியாக இந்தியா வந்து, காதலனுடன் சட்டவிரோதமாக இந்தியாவில் வாழ்ந்து வந்தார். பின்னர் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications