பானி பூரி,லஸ்ஸி..இந்தியா வந்த ஜப்பான் பிரதமருக்கு மோடி கொடுத்த சிம்பிள் ட்ரீட்..செம ருசி.. பாராட்டு
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு பானி பூரியும் லஸ்ஸியும் மிகவும் பிடித்து போய் விட்டது.
டெல்லி: இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் டெல்லியில் புத்த ஜெயந்தி பூங்காவுக்கு சென்று பிரதமர் மோடியுடன் பானி பூரியை ரசித்து சாப்பிட்டார். மிகவும் ருசியாக இருப்பதாகவும் கூறி கேட்டு வாங்கி சாப்பிட்டார் அவர், மாம்பழ பன்னா மற்றும் லஸ்ஸியையும் பருகினார். ஜப்பான் வந்த பிரதமருக்கு டெல்லியில் எளிமையான ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளார் மோடி.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்தார். இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சந்தன மர புத்தர் சிலை
இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடியும், புமியோ கிஷிடாவும் விவாதித்தனர். அப்போது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு கர்நாடக கலையைப் போற்றும் விதமாக மரப்பெட்டியில் சந்தன மர புத்தர் சிலையை வைத்து அதனை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

சர்வதேச நலன்
பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை வெளியிட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியாவும், ஜி7 அமைப்பின் தலைவராக ஜப்பானும் இருக்கும் இந்த நேரத்தில், சர்வதேச நலனுக்காக இரு தரப்பு முன்னுரிமைகளிலும் இணைந்து செயல்பட இது சிறந்த வாய்ப்பாகும் என்று கூறினார்.

இந்தியா - ஜப்பான் உறவு
ஜி20 தலைவராக இந்தியாவின் முன்னுரிமை நடவடிக்கைகளை ஜப்பான் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளேன். இந்தியா-ஜப்பான் இடையேயான சிறப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பானது ஜனநாயக கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் மீதான மரியாதை அடிப்படையிலானது. இது இந்திய-பசிபிக் பகுதிக்கும் முக்கியமானது. குறிப்பாக, அமைதியான, நிலையான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு இரு நாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் பயனளிக்கும் வகையில் இது முக்கியமானது என்றார். இருதரப்பு உறவுகளில் குறிப்பாக பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் ஆய்வு செய்தோம் என்று மோடி கூறினார்.

பொருளாதார ஒத்துழைப்பு
செய்தியாளர்களிடம் பேசயி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், 'இந்தியாவுடனான ஜப்பானின் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியை மேலும் ஆதரிப்பது மட்டுமின்றி ஜப்பானுக்கும் குறிப்பிடத்தக்க பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ஜப்பான் பிரதமர் தெரிவித்தார்.

பானி பூரி, லஸ்ஸி
அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவுக்கு சென்ற ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரதமர் மோடியுடன் பூங்காவை பார்வையிட்டார். பின்னர் அங்கே அமைக்கப்பட்டிருந்த பானி பூரி கடையில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஜப்பான் பிரதமர் கிஷிடா பானி பூரியை ரசித்து சாப்பிட்டார். மிகவும் ருசியாக இருப்பதாகவும் கூறி கேட்டு வாங்கி சாப்பிட்டார் ஜப்பான் பிரதமர். அதனைத் தொடர்ந்து மாம்பழ பன்னா மற்றும் லஸ்ஸியையும் பருகினார். அதைத்தொடர்ந்து பூங்காவில் உள்ள பால் போதி மரத்தை இருவரும் பார்வையிட்டனர். ஜப்பான் பிரதமருக்கு பானி பூரியின் ருசி பிடித்திருப்பதைக் கேட்ட கடைக்காரர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications