‛டார்கெட்’ தமிழகம்.. நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களாக 2 பேரை நியமித்த பாஜக.. யார் இவர்கள்?
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக பாஜகவுக்கான பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக மேலிடம் சார்பில் யூனியன் பிரதேசம், மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான விபரத்தை பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மாநிலங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள உத்தர பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்துக்கு வினோத் தாவ்டே, ஜார்கண்ட் மாநிலத்துக்கு லட்சுமிகாந்த் பாஜ்பாய், ஹரியானா மாநிலத்துக்கு குமார் தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக பாஜகவுக்கான பொறுப்பாளர்களாக அரவிந்த் மேனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் அரவிந்த் மேனன் பாஜகவின் தேசிய செயலாளராக இருக்கிறார். ஆர்எஸ்எஸ் பின்புலத்தை கொண்ட இவர் ஏற்கனவே தெலுங்கானா மாநில பாஜகவின் இணை பொறுப்பாளராகவும் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் சுதாகர் ரெட்டி தமிழக பாஜக இணை பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு தமிழகத்தின் நிலவரம் என்ன? என்பது நன்கு தெரியும். இத்தகைய சூழலில் அவருக்கு தமிழக பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக நாடாளுமன்ற தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications