ஜூலை 20ல் துவக்கம்! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு.. புதிய கட்டடத்தில் விவாதம்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 20ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று ட்விட்டர் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில், ‛‛ 2023ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடரின்போது அலுவல் மற்றும் இதர விஷயங்கள் தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு அனைத்து கட்சியினரும் பங்களிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்தை கடந்த மே மாதம் 29ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த கட்டடம் திறக்கப்பட்டபோது அடுத்த நாடாளுமன்ற கூட்டம் புதிய கட்டடத்தில் தான் நடக்கும் என பலரும் தெரிவித்தனர். அதன்படி ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications