ராகுல் பதவி பறிப்பு: தொடர் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்- சபாநாயகர் இருக்கை நோக்கி பேப்பர் வீச்சு!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியை பறித்ததைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்றும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபை நடவடிக்கைகளும் 11-வது நாளாக முடங்கின. லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை நோக்கி பேப்பரை கிழித்து காங்கிரஸ் எம்பிக்கள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடர்பாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஆனால் ராகுல் மேல்முறையீடு செய்ய அனுமதித்தது 30 நாட்களுக்கு இந்த சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு சபைகளும் நேற்றும் முடங்கின. இன்றும் காலை நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். டெல்லியில் இன்று மாலை நடத்தப்படும் கண்டன பேரணி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே அமளி நீடித்ததால் பகல் 2 மணி வரை சபை நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள், பேப்பரை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிற்பகலில் சபை கூடிய போதும் அமளி நீடித்தது. இதனால் சபை நடவடிக்கைகள் 11-வது நாளாக முடங்கியது. கடந்த வாரம் ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசிய பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க கோரியது பாஜக. இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முடங்கின.
முன்னதாக பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி இழிவாக பேசியதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் ஓபிசி சமூக எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications