குளிர்கால கூட்டத்தொடர்: அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்.. 2 அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இரண்டு அவைகளிலும் ஏற்பட்ட அமளியால் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று பாராளுமன்ற கூட்டத்தொடரில் லோக்சபாவில் அமைச்சர் ஸ்மிரிதி இராணி மூலம் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு பின்பாக தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா பாராளுமன்ற குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் நேற்று ராஜ்ய சபாவில் தேர்தல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஒரே வருடத்தில் 4 முறை தேர்தல் அடையாள அட்டை விண்ணப்பிக்க வாய்ப்பு, ஆதார் அட்டையை தேர்தல் அட்டையுடன் இணைக்கும் முறை என்று முக்கியமான மாற்றங்கள் அடங்கிய இந்த மசோதா விவாதம் இன்றி, கடும் எதிர்ப்புக்கு இடையில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாளை வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளிகள் மற்றும் மோதலால் இன்றே முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இன்று அவை அமளியோடு தொடங்கியது.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக இந்த கூட்டத்தொடரில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் ராஜ்ய சபா சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி மற்றும் அனில் தேசாய், திரிணாமுல் காங்கிரஸின் டோலா சென் மற்றும் சாந்தா சேத்ரி, சிபிஎம்மின் இளமாறன் கரீம் ஆகியோர் உட்பட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரசில் மட்டும் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 14 எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக கடந்த மாதம் 29ம் தேதியில் இருந்து கடுமையாக போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும் முடங்கின. இன்றும் அவையில் இது தொடர்பாக எம்பிக்கள் அமளி செய்தனர்.
அதேபோல் டிஎம்சி எம்பி டெரிக் ஓ பிரையன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்றது.
இதனால் இரண்டு அவையிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இரண்டு அவைகளிலும் ஏற்பட்ட அமளியால் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications