மோடி பேச ஆரம்பித்ததுமே.. எம்பிக்கள் அமளி.. மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு.. முதல்நாளே பரபரப்பு
டெல்லியில் இன்று நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது
டெல்லி: பரபரப்பான சூழலில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இன்று காலை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால் பிரதமர் மோடி உரையாற்றத் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து நாளை காலை 11 வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோதிலும், 5 மாநில சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.

அவைகள்
இந்நிலையில், இன்று தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடக்கிறது... இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.. அடுத்த 13-ம்தேதி வரை நடைபெறும் 19 அலுவல் நாட்களில் மொத்தம் 29 மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அசு திட்டமிட்டுள்ளது.

அனைத்து கட்சி
பாராளுமன்றம் இன்று கூடிய நிலையில், டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.. இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் வேளாண் சட்டங்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து எதிர்கட்சிகள் குரல்கள் எழுப்பின.

ஒத்துழைப்பு
அப்போது பேசிய பிரதமர் மோடி, அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் கூட்டத்தொடரில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தலைவர்கள் கட்சி பேதங்களை கடந்து ஒற்றுமையுடன் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மோடி
அதேபோல, மேலும் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, எந்த பிரச்சனை குறித்தும் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு தயார் என்றும் உறுதியளித்திருந்தார்.

சபாநாயகர்
இதனிடையே, மக்களவையின் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய சபாநாயகர் ஓம்பிர்லா அனைத்து எம்பிக்களுக்கும் நாடாளுமன்றத்தில் தங்கள் கருத்துக்களை வெளியிட வாய்ப்பு அளிக்கும் என்று உறுதியளித்திருந்தார். அதேபோல, மக்களவையில் மிகுந்த கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எம்பிக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மசோதாக்கள்
இந்த கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு, ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்பட்டு வருகிறது. மேலும் மழைக்கால கூட்டத் தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளன.

ஒத்திவைப்பு
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.. பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.. பெட்ரோல், டீசல் உயர்வு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் முழுக்கமிட்டனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால், மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது... இந்நிலையில் மீண்டும் அவை தொடங்கியது.. ஆனால் மறுபடியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை அவையை ஒத்திவைத்து மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications