ரூ.1 அபராதம் கட்டினால் குற்றம் செய்ததாக அர்த்தம் இல்லை.. சீராய்வு மனு தாக்கல் செய்த பிரஷாந்த் பூஷண்
டெல்லி: ஒரு ரூபாய் அபராதம் கட்டினால் நான் குற்றம் செய்ததாக அர்த்தம் கிடையாது என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். அதோடு தனக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷண் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பிரஷாந்த் பூஷண் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு ரூபாய் அபராதத்தை இன்று உச்ச நீதிமன்றத்தில் செலுத்தினார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பிஆர் கவாய், கிருஷ்ணா முராரி அமர்வு இந்த வழக்கில் தண்டனை வழங்கியது. அதில், பிரஷாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் 1 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் இல்லையெனில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் 3 ஆண்டுகள் இவர் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதி இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அபராதத்தை ஏற்றுக்கொண்ட பிரஷாந்த் பூஷண் இன்று அந்த 1 ரூபாய் அபராதத்தை செலுத்தினார். இந்த நிலையில் ஒரு ரூபாய் அபராதம் கட்டினால் நான் குற்றம் செய்ததாக அர்த்தம் கிடையாது என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். அதில் நான் அபராதம் கட்டி கட்டி இருக்கிறேன்.
அதற்காக நான் எனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தம் ஆகாது. அரசுக்கு எதிராகவும், அதிகாரதத்திற்கு எதிராகவும் பேசவே கூடாது என்று கூறுகிறார்கள்.
எதிர் கருத்துக்களை முடக்க பார்க்கிறார்கள். இதனால்தான் இப்போது நான் மீண்டும் இந்த வழக்கில் விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். எனக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யவும், அதை பெரிய அமர்வு விசாரிக்கவும் புதிய வழிமுறையை கொண்டு வர வேண்டும். இதற்காக நேற்று நான் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு அளித்தேன் என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே குறித்தும் முன்னாள் தலைமை நீதிபதிகள் மூன்று பேர் குறித்தும் பிரஷாந்த் பூஷன் செய்த டிவிட்தான் இந்த வழக்கிற்கு காரணம். நான்கு முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகளை கடுமையாக விமர்சனம் செய்து பிரஷாந்த் பூஷன் டிவிட் செய்து இருந்தார்.
அதிலும் தலைமை நீதிபதி போட்பே சொகுசு பைக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பிரஷாந்த் பூஷன் விமர்சனம் செய்ததும் சர்ச்சையானது.












Click it and Unblock the Notifications