பெகாசஸ் ஒட்டு கேட்பு: விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஸ்ரேல் அரசு தயாரித்த பெகாசஸ் எனும் மென்பொருள், பயங்கரவாதிகளின் செல்போன்களை ஹேக் செய்து சதித் திட்டங்களை அறிய வகை செய்யக் கூடியது. இதனை பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு ஆயுதமாக இஸ்ரேல் மற்றும் உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
இதனால் நாடுகளுக்கு மட்டுமே பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் கொடுத்து வந்தது. ஆனால் உலகின் பல நாடுகள் அரசியல் நடவடிக்கைகளுக்காக பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுகேட்ட விவகாரம் உலகை உலுக்கியிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் அரசியல் சூறாவளியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றம் முடக்கம்
இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300க்கும் அதிகமானோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக்கேட்கப்பட்டது என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகின. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய பதில் தரக் கோரி நாடாளுமன்றத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக கைகோர்த்து முடக்கின.

9 பொதுநலன் மனுக்கள்
இதனிடையே பெகாசஸ் ஒட்டுகேட்பு குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் 9 பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் உள்ளிட்டோரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் விவாதம்
இந்த விசாரணையின் போது ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் வழக்கு தொடரக் கூடாது; வலிமையான ஆதாரங்கள் இருக்கிறதா? என உச்சநீதிமன்றம் மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தது. அமெரிக்காவில் நடைபெறும் வழக்கு ஒன்றில் இஸ்ரேல் அரசு தாக்கல் செய்த ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் சர்மா தெரிவித்திருந்தார். இதையடுத்து மத்திய அரசு பதில் தர உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
Recommended Video

10 நாட்களுக்குள் பதில்- நோட்டீஸ்
மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், பெகாசஸ் ஒட்டுகேட்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை; செய்தி ஊடகங்களில் வந்த யூகங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கே தொடரப்பட்டுள்ளது. மேலும் பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் அரசு தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு தமது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தது. இவ்வழக்கின் இன்றைய விசாரணையின் போது, பெகாசஸ் ஒட்டுகேட்பு தொடர்பாக 10 நாட்களுக்குள் மத்திய அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications