அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை.. சந்திரசேரக ராவ் மகள் கவிதாவின் மனுவை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
டெல்லி புதிய மதுபான கொள்கையில் முறைகேடு செய்திருப்பதாக கவிதா மீது வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இது குறித்த வழக்கு விசாணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஓரிரு முறை மட்டுமே ஆஜரான கவிதா, பல முறை சம்மன்களை ஸ்கிப் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில் சுமார் 5 மணி ரெய்டு நடத்தப்பட்டு கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவிதாவின் கைது சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஜார்க்ண்ட் முதலமைச்சர் உட்பட பல முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் பிஆர்எஸ் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. மறுபுறம், தனது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படடது. ஆனால், கவிதாவின் மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்க மறுத்தனர். ஜாமீன் கோரி விசாரணை நிதிமன்றத்தை அணுக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனால் அப்செட் ஆன, கவிதா சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "நான் ஒன்று சொல்லலாமா? நீதியரசர்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன். இது இந்த நீதிமன்றத்தின் பொற்காலமல்ல என்பதை வரலாறு பதிவு செய்யும்" என்று கூறினார். இதற்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா சிரித்துக்கொண்டடே "பார்க்கலாம்" என்று பதிலளித்துள்ளார்.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது.
இதில் ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications