லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுகிறதா? மத்திய அமைச்சர் பதில்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக மக்களின் ஆதரவை பெறும் விதமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட உள்ளதா? என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிபார்க்கப்படுகிறது. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து விடும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. அதேவேளையில், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி விட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இதற்காக காங்கிரஸ் உள்பட பல்வேறு முக்கிய கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கியுள்ளன.

நாடு முழுவதும் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணியில் முடிவு செய்யப்பட்டு இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலை போல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் தேர்தல் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், தேர்தலுக்கு முன்பாக சில அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திபி சிங் பூரியிடம், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, இது தவறான கருத்து" என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஊடகங்களில் இதுபோன்ற ஒரு செய்தி பரப்பப்படுகிறது.

அதில் உண்மையில்லை. பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டுகிறது. சர்வதேச சந்தை விலை, போக்குவரத்து செலவீனங்கள், சுத்திகரிப்பு செலவு மற்றும் வரி ஆகியவற்றை வைத்தே எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications