பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90 என்பது இந்திய மக்களிடம் ஒரு பெரிய சுரண்டல்.. சுவாமி அதிருப்தி
டெல்லி: "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90 என்பது இந்திய மக்களிடம் ஒரு பெரிய சுரண்டல்" என பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு பாஜக மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை சர்வதே சந்தையில் குறைவாக இருந்தாலும், இந்தியாவில் வரிகள் காரணமாக கடுமையாக உயர்ந்துள்ளது. எல்லாவற்றையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்த அரசுகள், மதுவையும், பெட்ரோலையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவில்லை.
இரண்டும் மிகப்பெரிய வருவாய் தரும் வரிகள் என்பதால் இவற்றை குறைக்க மாநில அரசுகள் சம்மதிக்கவில்லை. மத்திய அரசும் இதற்கு மாற்று திட்டங்களை உருவாக்கவில்லை.
|
மக்களுக்கு சேராது
இதில் கொடுமை என்ன வென்றால் கச்சா எண்ணெய் விலை சந்தையில் ஏறும் போது அதற்கு தகுந்தாற்போல் விலைகள் ஏறும் நிலையில், பெரிய அளவில் விலை குறைந்த போது அதன் பலன் மக்களுக்கு போய் சேரவில்லை காரணம் அதிகப்படியாக விதிக்கப்பட்ட கலால் வரி தான் காரணம். பெட்ரோல் விலை குறையும் போது அதற்கு தகுந்தாற் போல் வரிகளை ஏற்றிவிடுவதால் விலை குறைப்பின் பலன் மக்களை சேர்வது இல்லை.
வாங்கும் சக்தி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவே இந்தியாவில் அனைத்து வகையான பொருட்களின் விலையும் உயருகிறது. விலைகள் உயருவதால் மக்களின் வாங்கும் சக்தி இயல்பாகவே குறைந்துவிடுகிறது. பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம், பெட்ரோல் , டீசல் விலை அதிகமாக இருப்பது தான்.
பாதிக்கும் மேல் வரி
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அந்த நேரத்தில் குரல் கொடுப்பார்கள். ஆனால் அதற்கு பெரிய அளவில் பலன்கள் இதுவரை கிடைத்ததே இல்லை. உண்மையில் பெட்ரோல் டீசல் விலையில் பாதிக்கும் மேல் வரி தான் என்பதே அதிர்ச்சியான விஷயம் தான்.
கடும் விமர்சனம்
சரி அதைவிடுங்க.. எவ்வளவு சொன்னாலும் அரசுகள் மனது வைத்தால்தான் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது சாத்தியம். எனவே இப்போது சொல்ல வந்ததை சொல்லிவிடுவோம். பாஜக மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமி, இவர் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் பார்க்காமல் தாறுமாறாக விமர்சிப்பார்.
சுவாமி கருத்து
அந்த வகையில் சுப்பிரமணியன் சுவாமி பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு குறித்து வெளியிட்டுள்ள ட்வீட் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90 என்பது இந்திய மக்களிடம் ஒரு பெரிய சுரண்டல். சுத்திகரிக்கப்படும் முன் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.30. அனைத்து வரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் கமிஷன் என 60 ரூபாய் சேர்கிறது. என் பார்வையில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40க்கு விற்கப்பட வேண்டும்:" என்றார்.