விஜய்யின் அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் திருமாவளவன் தயங்குகிறாரா? ஏன் இவ்வளவு யோசனை?
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் திருமாவளவன் தயங்குவது ஏன்.. கூட்டணியை அறிவிப்பதில் தொடங்கி, இறுதியாக அமைச்சரவையில் சேருவது வரை.. இவ்வளவு தூரம் யோசனை ஏன் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் இதுவரை அவர் பின்பற்றி வந்த சித்தாந்த அரசியலுக்கும், விசிக தொண்டர்களுக்கும் இடையேயான உணர்ச்சி போராட்டமாக இருப்பதே காரணம் என்கிறார்கள். விசிக தொண்டர்கள் தவெக அமைச்சரவையை விரும்புகிறார்கள். அவரே சித்தாந்த அரசியலை பற்றி யோசிக்கிறார்கள். இதுவே இப்போதைய தயக்கத்திற்கு காரணம் ஆகும்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய் தலைமையிலான த.வெ.க.வுக்கு 108 இடங்கள் கிடைத்தது. ஆனால் அக்கட்சியால் அரசை அமைக்க இயலவில்லை. இதனால் ஆட்சி அமைக்க விஜய்க்கு கவர்னர் வாய்ப்பு வழங்கவில்லை. ஆளுநரை நான்கு முறை சந்தித்த போதிலும் போதிய ஆதரவு கடிதத்துடன் வந்தால் ஆட்சியமைக்க அனுமதி என்று கூறினார் .

இந்த சூழலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவளித்தன.
அதனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு த.வெ.க.வுக்கு பலம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் ஆனந்த், ஆதித்ய நாராயணா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடாசலமணி, ஜெயக்குமார், ராஜகோபாலன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்தநிலையில் சட்டமன்றத்தில் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். அப்போது அ.தி.மு.க.வின் 47 எம்.எல்.ஏ.க்களில் 25 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்தனர். எனவே த.வெ.க. அரசுக்கான பலம் 144 ஆக உயர்ந்தது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலையில், சட்டமன்றத்தில் த.வெ.க.வின் பலம் 144 ஆக உள்ளது.
முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதி துறைகள் ஒதுக்கப்ப்பட்டன. என்றாலும், உள்துறை, வேளாண்மை, வருவாய், கூட்டுறவு, கூட்டுறவு, சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் இன்னும் நடைபெறவில்லை.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள், ஆட்சியில் பங்கெடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். அவர்கள் த.வெ.க. அரசை வெளியில் இருந்து ஆதரிக்கின்றனர்.
இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சரவையில் பங்கேற்குமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம் லீக் கட்சியும் இணைய வேண்டும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "த.வெ.க. தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு தன்னுடைய விருப்பத்தை என்னிடம் நேரில் வெளிப்படுத்தினார். அதை இப்போது மீண்டும் வெளிப்படையாக ஆதவ் அர்ஜுனா வழிமொழிந்திருக்கிறார்.
இதுகுறித்து, முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து பேசி, எங்கள் முடிவை அறிவிப்போம். இதற்காக மீண்டும் உயர்நிலை குழுவை கூட்ட வேண்டிய தேவையில்லை.
நாங்கள் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 2 இடங்களில் வெற்றி பெற்றோம். த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு 2 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், எங்கள் ஆதரவை வழங்கினோம். ஆனால் அவர்கள் ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்க எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, நிபந்தனையற்ற முறையில் எங்கள் ஆதரவை வழங்கினோம்.
தற்போது த.வெ.க.வின் அழைப்பை நாங்கள் மதிக்கிறோம். த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்குவதில் இடதுசாரிகள் என்ன முடிவு எடுத்தார்களோ அதே முடிவுதான் நாங்களும் எடுத்தோம். இப்போது எங்களுக்கு வந்திருக்கும் அழைப்பு குறித்து முடிவு எடுக்காவிட்டால், எங்கள் கட்சியினர் ஏன் அந்த அழைப்பை ஏற்கவில்லை? என்று கேள்வி எழுப்ப வாய்ப்பு உள்ளது. எனவே, நாங்கள் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்போம்" என்று கூறினார்.
இதனிடையே வன்னியரசு அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல்ககள் பரவி வருகின்றன. ஆனால் விசிக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதவரை அதனை ஏற்க முடியாத நலை உள்ளது. அதேநேரம் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் திருமாவளவன் தயங்குவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். கூட்டணியை அறிவிப்பதில் தொடங்கி, இறுதியாக அமைச்சரவையில் சேருவது வரை.. இவ்வளவு தூரம் யோசனை ஏன் என்ற கேள்விகள் எழுகிறது. ஆனால் இதுவரை அவர் பின்பற்றி வந்த சித்தாந்த அரசியலுக்கும், விசிக தொண்டர்களுக்கும் இடையேயான உணர்ச்சி போராட்டமாக இருப்பதே காரணமாம்.
விசிக தொண்டர்கள் தவெக அமைச்சரவையை விரும்புகிறார்கள். திமுக தராத மாற்றத்தை தவெக தந்துள்ளது. அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு என்பது விசிகவின் பலவருட கனவு. அதற்கான வாய்பை தவெக தந்துள்ளது. ஆனால் இதனை திருமாளவன் ஏற்க தயங்க இரண்டு காரணம் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உடன் உள்ள நட்பு. அடுத்ததாக விஜய் ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்றால் இதுவரை பேசி வந்த சித்தாந்த அரசியலுக்கு மாறுப்பட்டு நிற்பதாக முடியும். அதேநேரம் தொண்டர்களின் விருப்பம் தவெக பக்கமே இருக்கிறது. இதுவே இப்போதைய தயக்கத்திற்கு காரணம் ஆகும். தொண்டர்களின் விருப்பப்படியே முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.














Click it and Unblock the Notifications