"தேச நலன்களுக்கே முக்கியத்துவம் தரப்படும்.." மிக தெளிவாக சொன்ன பியூஷ் கோயல்! டிரம்பிற்கு பதிலடி
டெல்லி: அமெரிக்க அதிபர் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதைக் கண்டித்தும் பிற வர்த்தக கட்டுப்பாடுகளைக் காரணமாகக் காட்டியும் இந்திய ஏற்றுமதிகளுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் அபராதம் விதிப்பதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இது குறித்துப் பதிலளித்துள்ளார். டிரம்ப் நடவடிக்கைகள் குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகவும், நாட்டின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 2ம் தேதி ரெசிப்ரோக்கல் வரிகள் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு திடீரென அந்த வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதற்குள் உலக நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்தைப் போட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

வர்த்தக ஒப்பந்தம்
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்த போதிலும், அந்த ஒப்பந்தம் இறுதியாகவில்லை. இந்தச் சூழலில் திடீரென இந்தியா மீது 25% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதால் கூடுதலாக அபராதமும் விதிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார். இது இந்தியா அமெரிக்கா உறவைப் பாதிப்பதாக இருந்தது.
இதற்கிடையே இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் இது தொடர்பாக விளக்கமளித்தார். இந்தியா ஒரு காலத்தில் ஆபத்தில் உள்ள பொருளாதாரம் என்ற பட்டியலில் இருந்து.. தற்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறி வருவதாகக் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருளாதாரத்தை 'இறந்த பொருளாதாரம்' என்று விமர்சித்தது இருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பியூஷ் கோயல் பேச்சு இருந்தது.
பியூஷ் கோயல் விளக்கம்
அவர் மேலும் பேசுகையில், "இந்தியா அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளை வரும் அக்டோபர்-நவம்பர் இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக, மார்ச் மாதம் டெல்லியில் முதல் நேரடி சந்திப்பும், அதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் வாஷிங்டனில் மேலும் நான்கு சந்திப்புகளும் நடைபெற்றுள்ளன. பல ஆன்லைன் மீட்டிங்குள் நடத்தப்பட்டன.
இந்தச் சூழலில் சமீபத்திய ஏற்பட்ட நிகழ்வுகளின் (டிரம்பின் வரி விதிப்பைச் சொல்கிறார்) தாக்கங்கள் குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் உட்பட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்றுள்ளோம். நமது விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
நாட்டின் நலன்களுக்கே முக்கியத்துவம்
நமது தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம். வெறும் 10 ஆண்டுகளில் 'ஆபத்தில் உள்ள ஐந்து' பொருளாதாரங்கள் என்ற நிலையில் இருந்து உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா முன்னேறியுள்ளது. 11வது பெரிய பொருளாதாரமாக இருந்த நாம், தற்போது முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உயர்ந்திருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவோம்.

இந்தியாவின் பங்களிப்பு
சர்வதேச நிறுவனங்களும் பொருளாதார வல்லுநர்களும் இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் பிரகாசமான புள்ளியாகக் கருதுகின்றனர். சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் சுமார் 16% இந்தியா பங்களித்துள்ளது. உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் ஏற்றுமதியும் படிப்படியாக அதிகரித்துள்ளது.
டிரம்பிற்கு பதிலடி
ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா செய்துள்ளது. மற்ற நாடுகளுடனும் இதேபோன்ற வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 'வளர்ந்த பாரதம் 2047' என்ற இலக்கை நோக்கி, எங்களது பயணத்தைத் தொடர்வோம்" என்று தெரிவித்தார்.
பியூஷ் கோயல் தனது உரையில் டிரம்ப் அல்லது அமெரிக்கா ஆகிய வார்த்தைகளை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதிலும் அவரது இந்த பேச்சு டிரம்பிற்கு பதிலளிக்கும் வகையிலேயே இருந்தது.












Click it and Unblock the Notifications