"உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள்.." அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்! பரபர தகவல்
டெல்லி: ரஷ்யா அதிபர் புதின் உடன் தொலைப்பேசி மூலம் உரையாடிய நரேந்திர மோடி, உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்தி உள்ளார்.
உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா தொடர்ந்து வீரர்களைக் குவித்து வந்தது. உக்ரைன் எல்லையில் பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யா போர் தொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தன. அதற்கேற்ப உக்ரைன் மீது போரைத் தொடங்க ரஷ்ய அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

ரஷ்யா போர்
உக்ரைன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை தான் இது எனத் தெரிவித்துள்ள புதின், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது யாராவது தலையிட்டால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

இந்தியா
நீண்ட காலமாகவே இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வரும் நிலையில், இதில் நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்கும் என இந்தியா அறிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக உக்ரைன் தூதர் இகோர் பொலிகா தெரிவித்திருந்தார். இதனிடையே ராணுவ நடவடிக்கை தொடர்பாக புதின் உடன் பிரதமர் மோடி பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் பேச்சு?
இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வழியாக உரையாடி உள்ளார். உக்ரைன் மீது தொடங்கிய வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ரஷ்யாவுக்கும் நேட்டோ அமைப்புக்கும் இடையே உள்ள பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதற்கு அனைத்து தரப்பும் ஒருசேர முயல வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியர்களின் பாதுகாப்பு
அப்போது உக்ரைன் நாட்டில் ரஷ்யா எடுத்துள்ள ராணுவ நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் விளக்கியுள்ளார். அதேபோல உக்ரைன் நாட்டில் உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களைப் பத்திரமாக மீட்பது தொடர்பாகப் பிரதமர் மோடி விவாதித்தார். இந்தியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் எனப் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் ஒப்புக்கொண்டதாக மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் உடன் ஆலோசனை
முன்னதாக பிரதமர் மோடி உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களைத் தாயகம் அழைத்து வருவது தொடர்பாகப் பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார் மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தொடர்பாகவும் பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகம்
முன்னதாக, உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர இந்தியா சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும், அதற்குள் போர் மூண்டதால் உக்ரைன் வான்வெளி மூடப்பட்டது. இதனால் உக்ரைன் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது. இதனால் இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர மாற்று வழிகள் குறித்தும் அங்கு இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் வெளியுறவு அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications