“சபாநாயகருக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார் மோடி!” பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு!
டெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தாமலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்புகையில், மோடியை தாக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் முயற்சிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பிரியங்கா காந்தி, சபாநாயகருக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார் மோடி என சாடியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாகவும், எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி சபாநாயகருக்கு பின்னால் ஒளிந்துக்கொள்கிறார் என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி வேண்டுமென்றே சபையில் விவாதத்தைத் தவிர்ப்பதாகவும், நாடாளுமன்ற விவாதத்தை அரசு முடக்குவதாகவும் குற்றம் சாட்டினார். மோடி மக்களவையில் தோன்றுவதற்குப் பதிலாக, நடைமுறை விளக்கங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்காமலேயே மக்களவை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து பிரியங்கா காந்தியின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந்த தீர்மானம், குடியரசுத் தலைவர் உரையின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு அரசு பதிலளிக்க அனுமதிக்கும் ஒரு முக்கிய நாடாளுமன்ற நடைமுறையாகும்.
இந்த சர்ச்சைக்குப் பதிலளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் உரை வழங்க முடியாததற்கான சூழ்நிலையை பின்னர் விளக்கினார். மோடி சபையில் இருந்தார் என்றும், பதிலளிக்க திட்டமிடப்பட்டிருந்தது என்றும் பிர்லா கூறினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் போராட்டங்களால் சபைக்குள் இருந்த நிலைமை மோசமடைந்தது என்றும் ஓம் பிர்லா கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications