“முஸ்லிம் லீக் வந்தே மாதரம் பாடலை வெறுத்ததால்.. நேரு அதை தேசிய கீதமாக ஆக்கவில்லை” - மோடி
டெல்லி: "முஸ்லிம் லீக் கட்சி வந்தே மாதரம் பாடலை வெறுத்தது. ஆகவே வந்தே மாதரம் பாடல் இஸ்லாமியர்களை எரிச்சல் அடைய செய்யலாம் என கருதிய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அப்பாடலை தேசிய கீதமாக ஆக்கவில்லை" என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சித்துள்ளார். முஸ்லிம் லீக்-க்கு காங்கிரஸ் அடிபணிந்துவிட்டதாகவும், தேசிய பாடலை துண்டு துண்டாகப் பிரித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வந்தே மாதரம் பாடல் முஸ்லிம்களை தூண்டி விடும் என்று நேரு கூறியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சி எம்பிக்கள், வெட்கக்கேடு, வெட்கக்கேடு என்று முழங்கினர். அப்போது பிரதமர், கடந்த நூற்றாண்டில் சில சக்திகள் தேசியப் பாடலுக்கு துரோகம் இழைத்தன. யார் அதைச் செய்தார்கள் என்பதை அடுத்த தலைமுறைக்குச் சொல்வது நமது கடமை என கூறினார். முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக், 1937-ல் வந்தே மாதரத்திற்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸ் மற்றும் நேரு அதனை எதிர்க்காமல், மாறாக, வந்தே மாதரம் குறித்து விசாரிக்கத் தொடங்கினர் என்று விமர்சித்திருந்தார்.
மேலும் பேசிய பிரதமர், "ஜின்னாவின் எதிர்ப்பிற்குப் பிறகு, பண்டித ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், வந்தே மாதரத்தின் பின்னணியை தான் படித்ததாகவும், அது முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு எரிச்சலடையச் செய்யலாம் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், வந்தே மாதரத்தின் பயன்பாட்டை, அதுவும் பங்கிம் சந்திரரின் வங்காளத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஆராய்வோம் என்றும் நேரு எழுதியிருந்தார்.
வந்தே மாதரம் 50 ஆண்டுகளை எட்டியபோது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 100 ஆண்டுகளை எட்டியபோது அவசரநிலையின் பிடியில் இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கு ஊக்கமளித்த இந்த பாடல், துரதிர்ஷ்டவசமாக அப்போது இந்தியாவின் ஒரு 'இருண்ட காலத்திற்கு' சாட்சியாக இருந்தது.
இப்போது, வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த வேளையில், 1947-ல் நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த பெருமையையும், நமது கடந்த காலத்தின் மகத்தான பகுதியையும் மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக இது அமைகிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1875 நவம்பரில் எழுதிய இந்த பாடல், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு விரைவாகவே ஒரு வலிமைமிக்க முழக்கமாக மாறியது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications