களமிறங்கும் குவாட்.. இந்தியா, ஜப்பான், ஆஸி., அமெரிக்கா மார்ச் 12ல் மீட்டிங்.. மோடி, பிடன் பங்கேற்பு
டெல்லி: குவாட் கூட்டமைப்பு சார்பாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரும் மார்ச் 12ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்புதான் குவாட் (quad). இந்த குவாட் கூட்டமைப்பு நாடுகள் ஒவ்வொரு வருடமும் பல முறை ஆலோசனை கூட்டங்களை நடத்தும். ராணுவ பாதுகாப்பு, கடல்வழி போக்குவரத்து, பொருளாதார உதவி என்று பல விஷயங்களை இந்த நாடுகள் பகிர்ந்து கொள்ளும்.
முக்கியமாக கடற்படை போர் பயிற்சிகளை குவாட் நாடுகள் பலமுறை ஒன்றாக செய்துள்ளது. சீனாவுடன் மோதல் நிலவும் நிலையில் குவாட் கூட்டமைப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிபட்ட நிலையில் குவாட் கூட்டமைப்பு சார்பாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரும் மார்ச் 12ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
இதில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசான், ஜப்பான் பிரதமர் யாஸிஷிண்டே சுகா, அமெரிக்க அதிபர் பிடன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இணையவழி மீட்டிங் முறையில் இவர்கள் சந்திக்க உள்ளனர்.
கடல் போக்குவரத்து, எல்லை பாதுகாப்பு, கொரோனா வேக்சின், பொருளாதார மந்தநிலை குறித்து இவர்கள் விவாதிக்க உள்ளனர். அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக அதிபர் பிடன் உடன் பிரதமர் மோடி அதிகாரபூர்வ ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.