ஒரு வழியா தேர்தல் முடிஞ்சது.. எல்லோரும் ‘மோடியின் குடும்பத்தை’ நீக்குங்க! ஸ்ட்ரெய்ட்டாக சொன்ன மோடி..!
டெல்லி: மக்களவை தேர்தல் நிறைவடைந்து 3வது முறையாக பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் தேர்தலுக்கு முன் பாஜகவினர் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்த 'மோடியின் குடும்பம்' என்ற அடைமொழியை நீக்கிக் கொள்ளுமாறு மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றுக்கொண்டது.

குறிப்பாக பாஜக மூத்த தலைவர்களும் ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களோடு கட்சியின் தேசிய தலைவரான ஜே பி நட்டா உள்ளிட்ட 71 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
இந்நிலையில் தேர்தலுக்கு முன் பாஜகவினர் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்த 'மோடியின் குடும்பம்' என்ற அடைமொழியை நீக்கிக் கொள்ளுமாறு அவரே கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி," தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் உள்ள பெயருக்கு பின்னால் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' என்பதை சேர்த்தனர். நான் அதிலிருந்து நிறைய பலம் பெற்றேன்.
இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இது ஒரு வகையான சாதனையாகும், மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர். நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு பரிவார் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது." என கூறியுள்ளார். ஆனால் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்போம் மோடியின் குடும்பம் என்பதை நீக்க முடியாது என பாஜகவினர் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்னதாக பிகாரில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில் பேசிய ராஷ்டிய ஜனதா தல மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். மேலும் பிரதமர் மோடியை குடும்பம் அற்றவர் என விமர்சித்தார். இதனை தொடர்ந்து பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் சமூக வலைதள கணக்குகளில் பெயருக்கு பின்னால் 'மோடியின் குடும்பம் - மோடி கா பரிவார்' என இணைத்தனர்.
குறிப்பாக அமித்ஷா, ஜே.பி நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முதலமைச்சர்கள் யோகி ஆதித்யநாத், புஸ்கர் சிங் தாமி உள்ளிட்டோரும், தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற வார்த்தையை இணைத்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் அந்த வார்த்தையை இணைத்து கொண்டனர். இந்நிலையில் தான் தற்போது அவற்றை நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது 'நானும் காவலாளிதான் - Main bhi chowkidar' என்ற வார்த்தைகளை பாஜகவினர் தங்களின் சமூக ஊடக பக்கங்களில் இணைத்தது பின்னர் நீக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications