கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸ் மீது பிரதமர் மோடி திடீர் அட்டாக்- காரணம் அண்ணாமலை!
டெல்லி: தமிழ்நாட்டின் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது கச்சத்தீவு. ராமநாதபுரம் மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாக இருந்தது கச்சத்தீவு. தமிழ்நாட்டு மீனவர்களால்தான் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயமும் கட்டப்பட்டது.
கச்சத்தீவு 1974-ம் ஆண்டு இலங்கைக்கு மத்திய அரசால் தாரைவார்க்கப்பட்டது. அன்று முதலே கச்சத்தீவு விவகாரம் பேசுபொருளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தரவுகளைப் பெற்றிருந்தார். இந்த தரவுகளைப் பகிர்ந்து பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு அப்போதைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு தாரைவார்த்துக் கொடுத்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பலவீனமாக்குவதுதான் 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த செயல். காங்கிரஸ் கட்சியை எப்போதுமே நம்பவே கூடாது என்பதைத்தான் கச்சத்தீவு விவகாரம் வெளிப்படுத்துகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸின் நடவடிக்கை ஒவ்வொரு இந்தியரையும் கோபமடையச் செய்கிறது என கொந்தளித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவை ஆங்கிலேயர் ஆட்சியில் 1920ம் ஆண்டு முதல் உரிமை கோரியது இலங்கை. நாடு விடுதலைக்குப் பின்னர் இந்தியா கச்சத்தீவை மையமாக வைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது இலங்கைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் 1970-ம் ஆண்டு இலங்கை அரசு, கச்சத்தீவு தங்களுடையது என மீண்டும் உரிமை கோரியது.
அப்போது இந்திய பிரதமராக இருந்தவர் காங்கிரஸின் இந்திரா காந்தி அம்மையார். இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக. தமிழ்நாட்டில் முதல்வராக கருணாநிதி பதவியில் இருந்தார். இலங்கை ஜனாதிபதி சிறிமாவோ, டெல்லி வந்து இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய அரசு தன்னிச்சையாகவே கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க முடிவு செய்தது. இதற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர் விளக்கம் அளித்த இந்திரா காந்தி அம்மையார், இலங்கையில் பாகிஸ்தான் விமான தளத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தோம். அதற்கு பிரதிபலனாகவே கச்சத்தீவை கேட்டது இலங்கை. பாகிஸ்தானை அனுமதிக்கக் கூடாது என்பதற்காக கச்சத்தீவை தாரைவார்த்தோம் என்றார். அன்றைக்கு தமிழ்நாட்டு திமுக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுமே கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த இந்திராவின் நடவடிக்கையை மிக கடுமையாகவே எதிர்த்தனர் என்பது வரலாறு. இதனால்தான் 1976-ம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழ்நாட்டு மீனவர்கள் பங்கேற்கலாம்; தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடி வலைகளை உலர வைக்கலாம் என்பது உள்ளிட்ட சரத்துகள் சேர்க்கப்பட்டன. ஆனால் இலங்கை அரசு இந்த சரத்துகளை ஒப்பந்தத்தை இன்றளவும் மதிப்பதில்லை. இதனால் வங்க கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் ரத்தம் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது.
இந்த கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக என்ன நடந்தது என்பதைத்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுவிட்டதாகவும் இதனையே பிரதமர் மோடி பகிர்ந்துள்ளதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications