பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஈரான் - அமெரிக்கா போருக்கு பிறகு முதல் முறையாக டிரம்புடன் மோடி பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது, ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம் தொடர்பாக டிரம்புடன் மோடி ஆலோசித்ததாகவும், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

மோடி டிரம்ப் பேச்சு
அந்த பதிவில், "அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது ஹார்முஸ் நீரிணையைத் திறந்தே வைத்திருப்பதன் முக்கியத்துவம், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்தனர்" எனத் தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான, தடையற்ற கப்பல் போக்குவரத்து தொடர்வதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து பிரதமர் மோடியும் இந்த பேச்சுவார்த்தை குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.
பிரதமர் மோடி ட்வீட்
மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் தொடர்பாக இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். பதற்றத்தை தணித்து அமைதியை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து திறந்து இருப்பதை உறுதி செய்வதோடு, ஒட்டு மொத்த உலகமும் பாதுகாப்பாக அதை அணுகுவது அவசியமானது. அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான முயற்சிகள் குறித்து தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கும் நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம்" இவ்வாறு பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறினார்.












Click it and Unblock the Notifications