மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் டிக்கெட் புக் செய்யும் அனைத்து பயணிளுக்கும் எளிதாக கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும் சூழல் உருவாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் மிக முக்கியமான பொது போக்குவரத்து என்றால் அது ரயில்வே துறை தான்.. நமது நாட்டில் குறைந்த செலவில் எங்கு வேண்டுமானாலும் ரயில்கள் மூலம் செல்ல முடியும். இருப்பினும், ரயில்களில் டிக்கெட் கிடைப்பது இன்னுமே குதிரை கொம்பாகவே இருக்கும்.

முக்கிய ரூட்களில் எப்போதும் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்களிலேயே இருக்கும். இதற்கிடையே இந்த சிக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் தகவல்: அதாவது அடுத்த 5 ஆண்டுகளில், பயணம் செய்ய விரும்பும் எந்தவொரு பயணியாலும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை எளிதாகப் பெற முடியும் என்றும் இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதம் என்றும் என்று மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அஸ்வினி வைஷ்ணவ் பல்வேறு விஷயங்களில் தனது கருத்துகளை தெரிவித்தார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே துறையில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை பிரதமர் மோடி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனைவருக்கும் கன்பார்ம் டிக்கெட்: தொடர்ந்து பேசிய அவர், "அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயில்வேயின் திறன் அதிகரிக்கப்படும் என்பதே பிரதமர் மோடியின் உத்தரவாதம்.. யார், எப்போது, எங்கு பயணிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் எளிதாக கிடைக்கும் சூழல் உருவாக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அஸ்வினி வைஷ்னவ், கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதை விளக்கினார். முந்தைய ஆட்சிகளை காட்டிலும் மோடி ஆட்சியில் அதிக தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
ஒப்பீடு: இது தொடர்பாக அவர் பேசுகையில், "முந்தைய ஆட்சியில், அதாவது 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், ரயில் பாதைகள் அமைக்கும் பணி மிகவும் மெதுவாக இருந்தது. அந்த 10 ஆண்டுகளில் அவர்கள் 17,000 கிமீ தொலைவிற்கு மட்டுமே ரயில்வே பாதைகளை அமைத்தனர். அதேநேரம் மோடி பிரதமரான பிறகு 2014 முதல் 2024 வரை, 31,000 கிமீ தொலைவிற்கு புதிய ரயில் பாதைகளை அமைத்துள்ளோம்.
2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 5,000 கிமீ தொலைவிற்கு மட்டுமே ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. அதேநேரம் நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில், 44,000 கிமீ ரயில்பாதையை முழுமையாக மின்மயமாக்கிவிட்டோம். 2004-2014 வரையிலான காலத்தில் 32,000 ரயில் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் 54,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அனைத்தையும் தாண்டி 2014 வரை நமது நாட்டில் பிரத்யேக சரக்கு வழித்தடம் என்று ஒரு கிமீ கூட இல்லை. ஆனால், இப்போது இரண்டு ரூட்களில் சுமார் 2,734 கி.மீ. தொலைவிற்கு பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் உள்ளன. இது தவிர ரயில்வே துறையை மேம்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்..
அடுத்த ஐந்தாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரயில்வே நிச்சயம் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் பயணிகளுக்கான வசதிகள், அதிவேக ரயில்களை அதிகம் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications