கடும் கோபத்தில் மோடி? டிரம்ப் 4 முறை போன் செய்தும் பேச மறுப்பு.. வெளியான பரபரப்பு தகவல்!
டெல்லி: இந்திய இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக வரி யுத்தத்தை டிரம்ப் நடத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் சமீபத்திய வாரங்களில் 4 முறை பேசுவதற்கு டிரம்ப் முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் இதனை மோடி நிராகரித்துவிட்டதாகவும் ஜெர்மனியை சேர்ந்த நாளிதழ் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரி விகிதத்தை மேலும் உயர்த்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அதற்கு இந்தியா பகிரங்கமாக பதிலடி கொடுத்தது. ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், பல்லேடியம், உரங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றை அமெரிக்கா இறக்குமதி செய்து வருவதாக இந்தியா அம்பலப்படுத்தியது.

டிரம்ப் போனை நிராகரித்த மோடி
எந்தவொரு நாடுகளையும் போலவே, அதன் தேசிய நலன்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று இந்தியா உறுதிபட கூறியது. இதனால், இந்தியா மீது மேலும் 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இதன்படி இந்திய இறக்குமதி பொருட்கள் மீதான வரி தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிரம்ப் விதித்த இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
அமெரிக்கா எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், இந்தியா தனது நலனை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கும் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால், இந்தியா - அமெரிக்கா இடையே முன்னெப்போதும் இல்லாத அளவு வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியவை நல்ல நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ளும் டிரம்ப், மறுபக்கம் வரி அரசன் என்றும் விமர்சித்து வருகிறார்.
4 முறை பேச முயற்சித்து இருக்கிறார்
இந்தியா மீதான கடுமையான வரி விதிப்புக்கு டிரம்புக்கு அவரது சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இதற்கிடையே, சமீப நாட்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்ததாகவும் அதனை ஏற்க பிரதமர் மோடி மறுத்துவிட்டதாகவும் ஜெர்மன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Frankfurter Allgemeine என்ற ஜெர்மன் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச 4 முறை டிரம்ப் முயற்சித்து இருக்கிறார். ஆனால், பிரதமர் மோடி இதனை ஏற்க மறுத்துவிட்டார். வரி விதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் கோபத்தில் இருப்பதை இது காட்டுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது டிரம்ப் போன் செய்தார்?
அண்மையில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியிருந்தது நினைவு கொள்ளத்தக்கது. அமெரிக்க அதிபர் டிரம்பை அலஸ்காவில் சந்தித்து பேசிய பிறகு மோடிக்கு போன் செய்த புதின், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஜெர்மன் பத்திரிகையின் கூற்றுப்படி, இந்த கால கட்டங்களில்தான் டிரம்ப், மோடியை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கு முன்பாக இரு தலைவர்களும் கடந்த ஜூன் 17 ஆம் தேதி தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது 35 நிமிடங்கள் இருவரும் ஆலோசித்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது ஏப்ரல் மாதம் பகல்ஹாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் கொல்லப்பட்டதற்கு டிரம்ப், இரங்கல் தெரிவித்ததகவும் வெளியுறவுத்துறை கூறியிருந்தது. அதன்பிறகு இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக உரையாடவில்லை.












Click it and Unblock the Notifications