அமைதி பாதையை எதிரிகள் பின்பற்றாவிட்டால்.. அதை எப்படி கையாள்வது என்பது இந்தியாவுக்கு தெரியும் - மோடி
அகமதாபாத்: குஜராத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியா அமைதிப் பாதையை விரும்புவதாகவும், ஆனால் எதிரிகள் இதை பின்பற்றாவிட்டால் அதை எப்படி கையாள்வது என நமக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசு நாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்து, பயங்கரவாதத்தின் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது, "பாகிஸ்தானில் அரசும் ராணுவமும் பயங்கரவாதத்தை ஒரு தொழிலாகவே மாற்றி வைத்திருக்கிறது. இந்த பாதையைத்தான் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்? உங்களின் எதிர்காலத்தின் பாதை இதுதானா? என்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய பொறுப்பு பாகிஸ்தான் மக்களுக்கு இருக்கிறது. அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் உணவை உண்ணுங்கள். பயங்கரவாதம் பக்கம் திரும்பினால் அதற்கு பதிலடியாக தோட்டாக்கள்தான் கிடைக்கும்.
எனவே பாகிஸ்தான் மக்கள் தங்கள் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர வேண்டும். அதிகார வர்க்கத்தால் பயங்கரவாதம் எனும் நிகழ்ச்சி நிரல் அரங்கேற்றப்படுகிறது. இது அந்நாட்டின் அப்பாவி மக்களின் உயிரை பறிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து அந்நாடு தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் எனில், அந்நாட்டு மக்கள் ஒருமித்த முடிவை எடுத்து அதற்கு பங்காற்ற வேண்டும்.
நான் புண்ணிய பூமியிலிருந்து உங்களை பார்த்து சில கேள்விகளை எழுப்ப நினைக்கிறேன். நீங்கள் என்ன பெற்றிருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையின் நிலையை பாருங்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழித்தது யார்? உங்களை பார்த்து நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கான பதில் பயங்கரவாதம்தான். ஐஎம்எஃப் கடன் பெற்று, பொருளாதாரத்தில் நிலையாக நிற்க உங்கள் நாடு தள்ளாடுவதை பாருங்கள். இந்தியா எப்படி செழிப்பாக இருக்கிறது என்பதையும் பாருங்கள்.
நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறி வைத்தோம். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முயன்றது" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications