"நான் 3ஆவது முறையாக பிரதமர் ஆகும்போது.. இந்தியா 'அங்கே’ போகும்!" அடித்து சொல்லும் நரேந்திர மோடி
டெல்லி: அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அடுத்த முறையும் தான் பிரதமர் பதவியில் இருப்பேன் என்பதைப் பிரதமர் மோடி மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் லோக்சபா தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும் இப்போதே பல்வேறு கட்சிகளும் தேர்தல் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன.
முதலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டு "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஆளும் பாஜகவும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன.

பிரதமர் மோடி: இதற்கிடையே நேற்று டெல்லியின் புதுப்பிக்கப்பட்ட பிரகதி மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார். இதில் பேசிய பிரதமர் மோடி தனது மூன்றாவது ஆட்சியின் போது நாட்டில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை உறுதியளித்தார். அப்போது இந்தியா பொருளாதாரத்தில் டாப் 3 இடங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்தியாவின் உள்கட்டமைப்பு வேகமாக மாறி வருகிறது. உலகின் மிக உயரமான ரயில் பாலம், மிக நீளமான சுரங்கப்பாதை, மிக உயரமான இடம் சிலை, மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சாலை ஆகியவை இப்போது இந்தியாவில் உள்ளது. நாட்டு மக்களின் கனவுகளுக்கு ஏற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.
3ஆவது ஆட்சி: எனது முதல் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்தது. எனது இரண்டாவது பதவிக்காலத்தில், இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இந்த சாதனை தொடரும். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இந்தியா உலக பொருளாதாரத்தில் முதல் மூன்று இடங்களில் இருக்கும்.. எனது மூன்றாவது ஆட்சியில், இந்தியா முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக நிற்கும். இதுதான் மோடியின் உத்தரவாதம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாடு சுதந்திரம் அடைந்த போதில் இருந்து இருந்த வளர்ச்சியைக் கடந்த 9 ஆண்டுகளாக இருக்கும் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசுகையில், "கடந்த ஒன்பது ஆண்டுகளில் எனது அரசு 40,000 கிமீ ரயில் பாதைகளை மின்மயமாக்கியது. அதேநேரம் அதற்கு முன்பு சுதந்திரத்தில் இருந்தே வெறும் 20,000 கிமீ ரயில் பாதைகளை மட்டுமே மின்மயமாக்கினர். இப்போது ஒவ்வொரு மாதமும், 6 கிமீ மெட்ரோ பாதை, 4 லட்சம் கிமீ கிராம சாலைகளை அமைத்து முடிக்கிறோம்.

கடந்த 2014-ல் டெல்லி விமான நிலையத்தில் ஆண்டுக்கு 5 கோடி பேரை மட்டுமே கையாள முடிந்தது. இப்போது அது 7.5 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருக்கும் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 150ஐ எட்டியுள்ளது" என்றார். இப்படி தனது 9 ஆண்டுக் கால ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளைப் பிரதமர் மோடி பட்டியலிட்டார். அதேபோல இதில் அவர் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து விமர்சிக்கவும் தவறவில்லை.
அட்டாக்: எதிர்க்கட்சிகளை நெகடிவ் எண்ணம் கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "இப்போது நான் திறந்து வைத்துள்ள இந்த பாரத மண்டபத்தைத் தடுத்து நிறுத்த முயன்றார்கள். சிலரது நிர்பந்தம் தான் ஒவ்வொரு வேலையையும் நிறுத்தியது. பிரேக்கிங் நியூஸை பார்த்தால் உங்களுக்குத் தெரியும். ஊழல்வாதிகள் மீது பல வழக்குகள் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அவர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள் எனப் பாருங்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications