அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! முடிவுக்கு வரும் 50% வரி சிக்கல்? முக்கிய தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மோடி அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின் போது வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்திக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இந்தப் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இதற்காகச் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் உலகத் தலைவர்கள் நியூயார்க்கில் முகாமிடத் தொடங்குவார்கள்.. அதன்படி இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்திற்காகப் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.

மோடி- டிரம்ப் சந்திப்பு
இந்தப் பயணத்தில் தான் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திப்பார் எனச் சொல்லப்படுகிறது. இந்தியா அமெரிக்கா இடையே வணிகப் பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரியை விதித்துள்ளார். இந்தச் சூழலில் பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ட்ரம்ப்பைத் தவிர, பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தலைவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் முக்கியம்
மோடி- டிரம்ப் சந்திப்பு நடந்தால், இரு தலைவர்களும் ஏழு மாதங்களில் சந்திக்கும் இரண்டாவது சந்திப்பாக இது இருக்கும். முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்குச் சென்றபோது அவர்கள் சந்தித்துக் கொண்டனர். ட்ரம்ப் 2016-2020 வரை அதிபராக இருந்த காலகட்டத்தில் மோடி- டிரம்ப் இடையே நல்ல நட்பு இருந்தது. ஆனால், இரண்டாவது பதவிக்காலத்தில் அவர் இந்தியா மீது வரிகளை அறிவித்துள்ளார். இது இந்த நட்புறவைச் சற்றே பாதித்துள்ளன. எனினும், மோடி-ட்ரம்ப் சந்திப்பு நடைபெற வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.
அதேநேரம் இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக வேளாண்மை மற்றும் பால்பண்ணை துறைகளை அமெரிக்க ஏற்றுமதிகளை அனுமதிப்பதில் இந்தியா தயக்கம் காட்டுகிறது. அமெரிக்காவுக்கு இந்த இரு துறைகளில் மார்கெட்டை திறந்துவிட்டால் அது இந்தியா விவசாயிகளுக்கு எதிராக அமையும். இதன் காரணமாகவே இந்தியா அமெரிக்கா வணிக ஒப்பந்தத்தில் இழுபறி நிலவுகிறது.
50% வரி
வர்த்தகப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும் சூழலில், ட்ரம்ப் நிலைமையை மேலும் சிக்கலாக்கினார். இந்திய இறக்குமதிகளுக்கு 50% வரியையும் விதித்தார். இதில் முதல் 25% ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. மீதமுள்ள வரிகள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இந்தக் காலக்கெடுவுக்கு முன், இந்தியா மற்றும் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியா பதிலடி
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிளவுபட்ட மற்றொரு முக்கியக் காரணம், ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குவது. இந்த வருவாய் உக்ரைன் போரை நடத்த ரஷ்யாவுக்கு நிதி அளிப்பதாக அமெரிக்கா சொல்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யை வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். இருப்பினும், இதை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது. அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து யுரேனியம், இரசாயனங்கள் மற்றும் உரங்களைத் தொடர்ந்து வாங்குவதைச் சுட்டிக்காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications