கண்கள் சிவந்த மோடி.. "சர்வதேச அரங்கில் இந்தியாவை அசிங்கப்படுத்துறாங்க.." ஆவேச பேச்சு
டெல்லி: மீரட்டில் நமோ பாரத் ரயில்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அங்குப் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் இந்தியாவை அவமதிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் இதன் காரணமாகவே காங்கிரஸ் தனித்துவிடப்படுவதாகவும் மிகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.
மீரட்டில் பிரதமர் மோடி இன்று நமோ பாரத் ரயில்களைத் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே அதிவேக மெட்ரோ சேவையாக நமோ பாரத் அமைகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

கீழ்த்தரமான அரசியல்
டெல்லியில் நடந்த இந்தியா AI இம்பாக்ட் உச்சிமாநாட்டில் காங்கிரஸ் நடத்திய போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். சர்வதேச நிகழ்வைக் காங்கிரஸ் "அசிங்கமான மற்றும் அப்பட்டமான அரசியலுக்கு" பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் சித்தாந்த ரீதியாகத் திவாலானதையே இது காட்டுவதாக மோடி குறிப்பிட்டார்.
மீரட்டில் நமோ பாரத் மெட்ரோவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அந்த நிகழ்வில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர், காங்கிரஸைக் கடுமையாகச் சாடினார். இது தொடர்பாகப் பிரதமர் மோடி, "காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல், அக்கட்சி எவ்வளவு சித்தாந்த ரீதியாகத் திவாலாகிவிட்டது என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் தன் சொந்த நாட்டை இழிவுபடுத்துவதில் மும்முரமாக உள்ளது.
பாஜக நிகழ்ச்சி இல்லை
சில அரசியல் கட்சிகளால் இந்தியாவின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உலகின் மிகப்பெரிய AI மாநாட்டை இந்தியா நடத்தியது. ஆனால், அதைக் காங்கிரஸ் தனது இழிவான அரசியலுக்கான தளமாக மாற்றியது. இந்த AI மாநாடு, பாஜகவின் நிகழ்வு அல்ல என்பதைக் காங்கிரஸ் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது இந்தியாவின் நிகழ்ச்சி. ஆனால், அதில் அவர்கள் என்ன செய்துள்ளனர் பாருங்கள்!
காங்கிரஸ் தலைவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.. என் தாயை அவமதிக்கவும் தயங்குவதில்லை. இது தேசியப் பணி. அங்கு எந்த பாஜக தலைவரும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கண்ணியத்தை மீறியது. அவர்களின் இந்தச் செயல் ஒட்டுமொத்தத் தேசத்தினாலும் கண்டிக்கப்படுகிறது.
தனித்துவிடப்படும் காங்கிரஸ்
இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இந்தியாவை அவமதிப்பவர்களைக் காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டுகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது இந்த டெல்லி போராட்டத்திற்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளே இந்தச் சம்பவத்தில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டன. காங்கிரஸைத் தவிர எந்தவொரு எதிர்க்கட்சியும் இதுபோல செய்யவில்லை.
போராட்டம் என்ன?
காங்கிரஸ் தலைவர்களிடம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் நாட்டை ஆட்சி செய்ய விரும்பினால்.. முதலில் நாட்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு இதுபோன்ற செயல்களைச் செய்வது எந்தவொரு பலனையும் தராது" என்றார்.
டெல்லியில் நடந்த AI உச்சிமாநாட்டில் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் இறங்கினர். இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் சட்டையைக் கழற்றிக் கொண்டு அரங்கிற்குள் அத்துமீறி நுழைந்தனர். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த போட்டோக்களையும் அவர்கள் அணிந்திருந்தனர்.
அங்கு ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் கிருஷ்ண ஹரி, பீகார் மாநிலச் செயலாளர் குந்தன் யாதவ், உ.பி துணைத் தலைவர் அஜய் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ஹா யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications