கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் இல்லை.. சர்ச்சைக்கு இடையே துருவிய நெட்டிசன்கள்!
டெல்லி: CoWIN தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகள் பற்றிய விவாதம் தீவிரமாக எழுந்துள்ள நிலையில் இது கவனிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்காக வழங்கப்படும் CoWIN சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில், "ஒன்றாக இணைந்து, இந்தியா கோவிட்-19ஐ தோற்கடிக்கும்" என்ற மேற்கோளுடன், நீண்ட காலமாக பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது, கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கம், சமூக ஊடக பயனர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை மீண்டும் பதிவிறக்கம் செய்யும்போது மோடி புகைப்படம் அதில் இடம்பெறவில்லை என சமூக ஊடக பயனாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஸெனிகா தெரிவித்த நிலையில் அது தொடர்பாக பெரும் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், பலர் இந்த புகைப்பட நீக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபோது, பிரதமர் மோடியின் புகைப்படங்கள் அனைத்து அரசாங்க இணையதளங்களில் இருந்தும் நீக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகவே, தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக, 5 மாநில மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது குறிப்பிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்ட CoWIN சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நடேந்திர மோடி புகைப்படம் முன்பு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, "தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமரின் செய்தியுடன் புகைப்படம், தடுப்பூசிக்குப் பிறகும் கோவிட் -19 பாதுகாப்பு வழிமுறைகளாஇப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான செய்தியை வலுப்படுத்துகிறது" என்று அப்போதைய சுகாதார அமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications