நாட்டின் மிகச் சிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவர் பெரும்புலவர் திருவள்ளுவர்- பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி: நாட்டின் மாபெரும் தத்துவஞானி, கவிஞர் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவர் பெரும்புலவர் திருவள்ளுவர் என்றும் திருக்குறள் நூலானது உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்வதுடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்த ஆழமான புரிதல்களை வழங்குகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திருவள்ளுவர் தினத்தில், நாட்டின் மிகச் சிறந்த தத்துவ ஞானிகள், கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான பெரும்புலவர் திருவள்ளுவரை நினைவு கூர்வோம். அவரது குறட்பாக்கள் தமிழ் கலாச்சாரத்தின் சாரத்தையும் நமது தத்துவ பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. அவரது போதனைகள் நேர்மை, கருணை மற்றும் நீதியை வலியுறுத்துகின்றன. காலத்தால் அழியாத அவரது படைப்பான திருக்குறள், உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்வதுடன் பல்வேறு பிரச்சினைகளில் ஆழமான புரிதல்களையும் வழங்குகிறது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நாம் தொடர்ந்து கடினமாகப் பணியாற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவி உடை திருவள்ளுவர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காவி உடையுடனான திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில்,
எக்காலத்துக்கும், எல்லா நாட்டவர்க்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

பிரதமர் மோடி, திருக்குறளை, உலகம் முழுவதும், பல மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்ததோடு, சிங்கப்பூரில் சர்வதேச திருவள்ளுவர் கலாச்சார மையம், மலேசியா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை உட்பட, உலக நாடுகளில் திருவள்ளுவர் பெருமையைக் கொண்டு சேர்த்திருக்கிறார். மனிதக் குலத்தின் வாழ்வியல் முறைகளும், பாரதத்தின் கலாச்சாரமும் ஒருங்கே நிறைந்திருக்கும் திருக்குறளைப் படிப்போம். தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications