மோடியை சந்தித்த இலங்கை நிதியமைச்சர்.. தமிழகம் சார்ந்த 4 திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்திய பிரதமர்
டெல்லி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு நிதியமைச்சர் பாசில் ராஜபக்சே நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கடந்த இலங்கை சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை நிதியமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்ததை அடுத்து, அந்நாட்டுக்கு இதுவரை 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா நிதியாக வழங்கியுள்ளது.

இலங்கை நிதியமைச்சர் வருகை
தற்போது இலங்கையில் உள்நாட்டு பிரச்சனை தீவிரமடைந்து வன்முறையாக உருவெடுத்து இருக்கும் நிலையில், அந்நாட்டின் நிதியமைச்சர் பாசில் ராஜபக்ஷே 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய அவர், இலங்கைக்கு அவசர காலத்தில் நிதியுதவி வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பதிவு
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "இலங்கை நிதியமைச்சர் பாசில் ராஜபக்ஷே உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. இந்தியா - இலங்கை இடையேயான பொருளாதார கூட்டுறவு வளர்வதையும் இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரித்து இருப்பதையும் காண்பதில் மகிழ்ச்சி" எனக் கூறியுள்ளார்.

நிர்மலா, ஜெய்ஷங்கரை சந்திக்கும் பாசில்
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரை இலங்கை நிதியமைச்சர் பாசில் ராஜபக்ஷே சந்திக்க இருக்கிறார். இதில் இந்தியா இலங்கைக்கு வழங்கி இருக்கக்கூடிய கடன் நிலுவை தொடர்பாகவும், இருநாட்டு உறவுகள் குறித்தும் பேச உள்ளார்.

ராமாயண, பவுத்த சுற்றுலா குறித்து பேச்சு
இலங்கை நிதியமைச்சர் பாசில் ராஜபக்ஷே பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "இந்தியா - இலங்கை இடையே நட்புறவை வலுப்படுத்தி இருநாட்டு கலாச்சாரம், பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் வளர்ச்சி அடைவது தொடர்பாக தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அத்துடன் இந்தியாவில் பவுத்தமத சுற்றுலாவையும் இலங்கையில் ராமாயண சுற்றுலாவையும் அனுமதிப்பது தொடர்பாக பேசியுள்ளனர்."

காங்கேசன்துரை துறைமுகம், பலாலி விமான நிலையம்
இந்த சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாவது, "இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான காங்கேசன்துரையில் துறைமுக மேம்பாடு மற்றும் ஜஃப்னாவில் உள்ள பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்குவது குறித்து பிரதமர் மோடி இலங்கை நிதியமைச்சருக்கு அழுத்தம் கொடுத்தார். அதேபோல் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல்வழி போக்குவரத்து தொடங்குவது குறித்தும் இருதலைவர்கள் பேசினர்." என்றார்.












Click it and Unblock the Notifications