"ஷேர் மார்கெட்டில் அதானி கம்பெனியை பார்த்தீங்களா.. எகிறி அடித்த ராகுல்! அடுத்து சொன்னது தான் முக்கியம்
டெல்லி: லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக அதானி நிறுவனங்கள் குறித்தும் அவர் பேசியிருந்தார்.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவியது.

லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தொடக்கம் முதலே கடும் போட்டி நிலவி வந்தது.
லோக்சபா தேர்தல் முடிவுகள்: கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், இந்த முறை பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. தற்போது வரை பாஜக 239 சீட்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. என்டிஏ கூட்டணி 272 சீட்களை கடந்துள்ள நிலையில், கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்குமா என்பது தெளிவாகத் தெரிவில்லை.
அதேநேரம் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளைக் கைப்பற்றியது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா மாநிலங்களில் இந்தியா கூட்டணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணி தொண்டர்களிடையே மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசிய ராகுல் காந்தி, அதானி பங்குகள் குறித்தும் பேசினார்.
ராகுல் காந்தி: அதாவது அவர், "இந்தியா கூட்டணி மிகச் சிறப்பாக இந்தத் தேர்தலில் செயல்பட்டுள்ளது. அரசியல் சாசனம், நாட்டின் இட ஒதுக்கீடு மீது பாஜக நடத்திய தாக்குதல்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தோம். அதற்கான வெற்றி கிடைத்துள்ளது.
இன்று நீங்கள் அதானியின் பங்குகளைப் பார்த்து இருப்பீர்கள்.. பார்த்தீர்கள் தானே.. இது ரொம்பவே சுவாரசியமான விஷயம்.. ஏனென்றால் பொதுமக்கள் அதானியை மோடி உடன் தொடர்புப்படுத்துகிறார்கள். மோடி தோற்கடிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதைப் பங்குச்சந்தையே சொல்கிறது..
அடுத்துச் சொன்னது முக்கியம்: மோடி போய்விட்டால் அதானியும் போய்விடுவார் என்பதை பங்குச்சந்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இருவருக்கும் இடையே நேரடியாக உறவு இருக்கிறது. அதுவும் ஊழலுடன் தொடர்புடைய உறவு" என்று கூறியிருந்தார்.
அதானி பங்குகள்: இன்று காலை முதல் ஒரு பக்கம் தேர்தல் முடிவுகள் வெளியாக மறுபுறம் பங்குச்சந்தையும் மளமளவென சரிந்தது.. குறிப்பாக அதானி நிறுவனத்தின் பங்குகள் தான் மிகப் பெரியளவில் வீழ்ச்சி அடைந்தது. அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் 21.40% சரிந்தது.. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 20% சரிந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் 19.07%, அதானி க்ரீன் எனர்ஜி 19.43% சரிந்தது. இது தவிர ஏடிஜிஎல் (-18.53), அதானி பவர் (-17.55%), அம்புஜா சிமெண்ட்ஸ் (-16.10), ஏசிசி (-15.01%), அதானி வில்மர் (-9.99%) என்று அனைத்து அதானி நிறுவனத்தின் அனைத்து பங்குகளுமே சரிந்தன.
ராகுல் காந்தி தொடக்கம் முதலே அதானி உள்ளிட்ட ஒரு சில தொழிலதிபர்களுக்குச் சாதகமாக மோடி அரசு செயல்பட்டு வருவதாகச் சாடி வரும் நிலையில், இன்று அதானி பங்குகளும் சரிவடைந்தது. எனவே, அதைக் குறிப்பிட்டே ராகுல் காந்தி பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications