ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்.. கண்கள் சிவந்த மோடி.. அமைச்சரவை கூட்டத்தில் சீறிய பிரதமர்
டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இருப்பினும், போதிய ஆதரவு இல்லாததால் மசோதா நிறைவேறவில்லை. இதற்கிடையே இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாகப் பிரதமர் மோடி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சியினர் மாபெரும் தவறு செய்துவிட்டதாகவும் இதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
மத்திய அரசு மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டு வந்தது. நேற்றைய தினம் இது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மைக்கு 3ல் 2 பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், அதற்கு போதிய வாக்குகள் கிடைக்காததால் மசோதாக்கள் தோல்வி அடைந்ததது.

நாட்டு மக்களிடையே உரை
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் எனப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதேநேரம் அவர் எது தொடர்பாக உரையாற்றுவார் என்பது குறித்து பிரதமர் அலுவலகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனினும், மசோதாக்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நேரத்தில் பிரதமர் ஆற்றப் போகும் இந்த உரை அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த மசோதா நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டசபை பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதையும், மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 543ல் இருந்து 850 ஆக உயர்த்துவதையும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. மசோதாவிற்கு ஆதரவாக 298 எம்.பி.க்கள் வாக்களித்தாலும், 230 பேர் எதிர்த்தனர். 3ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காததால் மசோதா தோல்வி அடைந்தது.
அமைச்சரவை கூட்டம்
இதனால் அதிருப்தியில் இருந்த பிரதமர் மோடி, இன்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் தனது அமைச்சர்களிடம் இது குறித்துத் தீவிரமாக விவாதித்தார். அப்போது பிரதமர் எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்காததால், அவர்கள் குற்றவாளிகள் என்றும், பெண்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளின் இந்த நிலைப்பாட்டைத் தவறு என்று குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்தில் இதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
மோடி கோபம்
இது தொடர்பாக அவர், "பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு உன்னதமான மசோதாவை எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்திவிட்டன. அவர்கள் நாட்டுப் பெண்களுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். தங்களின் அரசியல் லாபத்திற்காகப் பெண்களின் கனவுகளைச் சிதைத்துவிட்டார்கள். எதிர்க்கட்சிகளின் இந்தத் துரோகத்தை நாம் சும்மா விட்டுவிடக் கூடாது. இந்தச் செய்தியை நாட்டின் மூலைமுடுக்கெல்லாம், ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு மனிதரிடமும் கொண்டு செல்லுங்கள். பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது யார் என்பதை மக்கள் உணர வேண்டும்" என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி
மத்திய அரசு மகளிர் மசோதாவுடன் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவையும் இணைத்திருந்தது. அதாவது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அப்படிச் செய்தால் வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். மாறாகத் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதன் காரணமாகவே தமிழ்நாடு உட்படத் தென்மாநிலங்கள் இதைக் கடுமையாக எதிர்த்தது. இதற்கிடையே தான் தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்துப் பேசாமல்.. மகளிர் மசோதாவை எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டதாக ஆளும் தரப்பு விமர்சனங்களை ஆரம்பித்துள்ளன.














Click it and Unblock the Notifications