மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்
டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் மோடி பதிலளித்து பேசியதாவது:
பாஜக 2 எம்.பிக்களைக் கொண்டதாக இருந்தது. இன்று கடுமையான உழைப்பால் நாட்டை ஆட்சி செய்கிறோம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது நாங்கள் குறை கூறிக்கொண்டிருக்கவில்லை.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை குறைகூறுவது ஒரு நோய். இந்த புதிய நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பல மாநிலங்களில் ஆட்சிகளில் இருக்கின்றனரே.. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வெற்றி பெற்றுதானே ஆட்சியில் இருக்கிறார்கள்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து விளக்க தேர்தல் ஆணையம் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் பெரும்பாலான கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் எப்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது குறை சொல்லலாம்?
முன்பு வாக்குச் சாவடிகளை கைப்பற்றி வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. ஆனால் தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது குறித்து பேசுகிறோம். இது ஆரோக்கியமான ஜனநாயகம். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.