என்னை மன்னித்து விடுங்கள்.. எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டை அழித்துவிட்டன – மோடி வருத்தம்
டெல்லி: மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தோம். எங்களின் மிகச்சிறந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நசுக்கப்பட்டு விட்டது. அனைத்து தாய்மார்களிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை விரும்பவில்லை. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டதை திமுக - காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. அவர்களுக்கு பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டதால், அத்துடன் இணைக்கப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவும் தோற்கடிக்கப்பட்டிருப்பதாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன.

இப்படி இருக்கையில், நாட்டு மக்களிடையே மோடி என்ன பேசப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று நான் முக்கியமான விஷயத்தை பேச இருக்கிறனே். மகளிர் இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம். மசோதா நிறைவேறி இருந்தால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பலனாக இருந்து இருக்கும். எதிர்க்டக்சியினருக்கு பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தோம். எங்களின் மிகச்சிறந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நசுக்கப்பட்டு விட்டது. அனைத்து தாய்மார்களிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் உள்ளதை என்னால் உணர முடிகிறது. தேச நலனை விட அரசியலே எதிர்க்கட்சிகளுக்கு பெரிதாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை விரும்பவில்லை. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டதை திமுக - காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. 40 ஆண்டு கால போராட்டத்தை ஒரு நொடியில் அழித்துவிட்டார். பெண்கள் மசோதா முறியடிக்கப்படவில்லை. அழிக்கப்பட்டு உள்ளது. மசோதாவை தடுத்து நிறுத்தியவர்களை பெண்கள் மறக்க மாட்டார்கள். சுயநல நோக்கத்திற்காக இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் துரோகத்துக்கு மொத்த நாடும் சாட்சியாக உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்று கடுமையாக சாடினார்.
முன்னதாக இன்று கோவையில் பிரதமர் மோடி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக - பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போதும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக திமுக செயல்பட்டதாக கூறி விமர்சனம் செய்தார்.
அப்போது, ''நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தோற்கடித்துள்ளது. இந்த மசோதா மட்டும் சட்டமாகி இருந்தால் சாதாரண பெண்கள் எம்பி, எம்எல்ஏக்களாகி ஆகியிருப்பார்கள். இந்த மசோதா வழியாக தமிழகத்துக்கு அதிக இருக்கைகள் கிடைக்க இருந்தது. ஆனால் இதை திமுக விரும்பவில்லை. திமுகவின் செயல்கள் தெளிவாக அம்பலமாகிவிட்டது. கருப்பு உடைகள் அணிந்து திமுக தங்களின் தீயை எண்ணங்களுக்கு திரை போட முடியாது. உங்களின் (திமுக) கெட்ட செயல்களின் பலன்களில் இருந்து இனி தப்பவே முடியாது. மக்கள் உங்களின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டுவிட்டார்கள். பொய்களை பேசும் திமுகவால் இனி பொய்களை மறைக்க முடியாது.
தமிழர்களே உங்களுக்கு ஒன்றை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எங்கள் போராட்டம் முடிந்துவிடவில்லை. இது தொடக்கம் மட்டும் தான். பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் உங்களின் உரிமைக்காக போராடுவார்கள். இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு நான் நாட்டு மக்களுக்கு உரையாற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நிச்சயம் அதனை கேளுங்கள்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications