2 பதவியேற்பு விழாக்கள்.. முடிந்ததுமே டெல்லி வந்து அவசர ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி! இதான் மேட்டர்!
டெல்லி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 53 பேர் உயிரிழந்த நிலையில், டெல்லியில் இந்த தீ விபத்து குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் 6 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தில் சுமார் 195 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குவைத் நேரப்படி இன்று காலை 6 மணிக்கு இந்த குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

அதிகாலையில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இதனால் தீ வேகமாக பரவி அடுக்குமாடி குடியிருப்பின் பல பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரிந்தது. தீயில் இருந்து தப்பிக்க முயன்ற பலர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்தனர். தீயில் கருகி 53 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், தீ விபத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்துவிட்டனர். தீ விபத்து நடந்த குடியிருப்பில் இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். விபத்தில் உயிரிழந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
முதற் கட்டமாக, உயிரிழந்தவர்களில் 21 இந்தியர்களின் பெயர் விவரங்கள் குவைத் அரசால் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்தியர்கள் தீ விபத்தில் பலியான செய்தி வந்ததுமே, பிரதமர் மோடி, இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கே.வி.சிங்கை அவசரமாக குவைத் அனுப்பியுள்ளார்.
மேலும், இந்த விபத்து தொடர்பான அவசர உதவிக்கு இந்திய அரசு சார்பில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கூறியுள்ளது.
இதற்கிடையே பிரதமரான நரேந்திர மோடி ஆந்திராவில் பாஜக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு இன்று முதல்வராகப் பதவியேற்ற விழாவில் கலந்துகொண்டார். அதன் பின்னர், ஒடிசா சென்று பாஜக முதல்வர் மோகன் சரண் மாஜி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
பிறகு டெல்லி திரும்பிய மோடி, உயர்மட்ட தலைவர்களை அழைத்து குவைத் தீ விபத்து குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடனடியாக குவைத்திற்கு சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தோர் உடல்களை விரைவாக இந்தியா அனுப்பவும் உதவுமாறு அறிவுறுத்தினார். மேலும், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், "குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களுக்கு நெருக்கமானவர்களை பற்றி தான் உள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications