ஜிஎஸ்டி மேலும் குறைப்பு? "மக்கள் வரிச்சுமை குறைக்கப்படும்.." பிரதமர் மோடி சொன்ன வார்த்தை! ஆஹா நோட் பண்ணுங்க
டெல்லி: மத்திய அரசு சமீபத்தில் தான் ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் கணிசமாகக் குறைத்திருந்தது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையும் குறைந்திருந்தது. இதற்கிடையே ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் தொடரும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது பொதுமக்களின் வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்படும் என்றார். இதனால் மீண்டும் ஜிஎஸ்டி குறைக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் ஜிஎஸ்டி கவுன்சில், நமது நாட்டில் அமலில் இருக்கும் ஜிஎஸ்டி கட்டமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்தது. இந்த புதிய வரி முறைகள் கடந்த திங்கள்கிழமை, செப்டம்பர் 22ம் தேதி அமலுக்கு வந்தது. இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலையும் கணிசமாகக் குறைந்தது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி, ஜிஎஸ்டி தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி
நமது நாட்டில் ஜிஎஸ்டி குறித்த சீர்திருத்தங்கள் தொடரும் எனவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது பொதுமக்களின் வரிச்சுமை படிப்படியாகக் குறையும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை நிலைத்தன்மை மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு ஆகியவை தான் இந்தியாவைச் சீர்திருத்தங்களுக்கு உகந்த நாடாக மாற்றியுள்ளதாகக் கூறினார்.
வரி மேலும் குறைப்பு?
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "2017ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 2025ல் மேலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், இத்துடன் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. பொருளாதாரம் வளர வளர வரிச்சுமை படிப்படியாகக் குறையும். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். இதனால் வரும் நாட்களிலும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடரும்.
ஏற்கனவே ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களையும் அமல்படுத்தி உள்ளோம். இதன் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி வரிச் சலுகையை மக்கள் பெறுவார்கள். எனது அரசு வரிகளைக் கணிசமாகக் குறைத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பை அதிகரித்துள்ளது.
மத்திய அரசு திட்டங்கள்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மட்டுமில்லை கடந்த சில ஆண்டுகளில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 'மேக் இன் இந்தியா' திட்டத்தைக் கொண்டு வந்தோம். தொழில் தொடங்குவதை எளிதாக்கினோம்..ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தோம். 40,000க்கும் மேற்பட்ட இணக்க விதிகள் நீக்கப்பட்டுள்ளது.. நூற்றுக்கணக்கான சிறு வணிகக் குற்றங்கள் குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியா இப்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. ஒரு வலுவான சுதேசி உணர்வு பரவி வருகிறது. மக்கள் பெருமையுடன் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குகிறார்கள்.. வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்" என்றார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்
இம்மாதத் தொடக்கத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்மொழிந்தது. முன்பு 5, 12, 18, 28 ஆகிய நான்கு பிரிவுகளில் வரி வசூலிக்கப்பட்ட நிலையில், அதில் 12% மற்றும் 28% வரிகள் நீக்கப்பட்டன. இப்போது 5 மற்றும் 18% என இரு வரிகள் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. 12%ல் இருந்த பெரும்பாலான பொருட்கள் விலை 5%க்கு கொண்டு வரப்பட்டன. இந்த வரி சீர்திருத்தங்கள் அனைத்தும் கடந்த திங்கள்கிழமை செப்டம்பர் 22ம் தேதி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications