குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு!
டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 26) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில், வீரதீரம், சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை & கலாச்சாரம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சாதனைகளைப் படைத்த 20 குழந்தைகளுக்கு பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை ஜனாதிபதி முர்மு வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் பெற்றவர்களை வாழ்த்தினார். மேலும் விருது பெற்ற குழந்தைகள் தங்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்றார். இந்த விருதுகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்கமளிக்கும் என்று ஜனாதிபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர்களின் ஊக்கத்திற்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். டிசம்பர் 26 அன்று கொண்டாடப்படும் வீர் பால் திவாஸின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகையில், சுமார் 320 ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து இந்தியர்களாலும் போற்றப்படும் பத்தாவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங் ஜி மற்றும் அவரது நான்கு மகன்கள் உண்மை மற்றும் நீதிக்காகப் போராடி உச்சபட்ச தியாகங்களை செய்ததை நினைவுகூர்ந்தார்.












Click it and Unblock the Notifications