போர் வெற்றியை கொண்டாட.. ரஷ்யாவுக்கு விரையும் பிரதமர் மோடி.. ‛மே 9’ தேதியின் பின்னணி
டெல்லி: போர் வெற்றியை கொண்டாடுவதற்கான விழாவில் பங்கேற்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மே 9 ம் தேதி ரஷ்யாவுக்கு செல்ல உள்ளதாகவும், இதில் நம் நாட்டு ராணுவ வீரர்களும் பங்கேற்க உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்னும் போர் மட்டும் முடிவுக்கு வரவில்லை. தற்போது இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மும்முரமாக உள்ளார்.

முதற்கட்டமாக டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு அமெரிக்கா - ரஷ்யா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவுதியில் சந்தித்து பேசியுள்ளனர்.
அதேபோல் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரும்படி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் அவர் வெள்ளை மாளிகைக்கு செல்லும் நிலையில் இந்த போர் என்பது முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் தற்போது நம் நாட்டின் பிரதமர் மோடி வரும் மே மாதம் 9 ம்தேதி ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து அழைப்பு வந்துள்ள நிலையில் பிரதமர் மோடி ரஷ்யா செல்ல உள்ளார். இதுதொடர்பாக ரஷ்யாவின் செய்தி நிறுவனம் TASS முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது அதில் ‛‛வரும் மே மாதம் 9 ம் தேதி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள சிகப்பு சதுக்கத்தில் இரண்டாம் உலகப்போரின் வெற்றி விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. அன்றைய தினம் சிகப்பு சதுக்கத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் இந்திய படை வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற உள்ளது. இவர்கள் பிரதமர் மோடி ரஷ்யா செல்வதற்கு ஒரு
மாதத்துக்கு முன்பாக அங்கு சென்று ஒத்திகை மேற்கொள்ள உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் உலகப்போர் என்பது ஜெர்மனி மற்றும் அப்போதைய சோவியத் யூனியன் (இப்போது ரஷ்யா) இடையே நடந்தது. 1941 ஜுன் 22ம் தேதி
இந்த போர் வெடித்தது. ஜெர்மனி, சோவியத் யூனியனை தாக்கியது. அதன்பிறகு இருநாடுகளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த போர் என்பது 1945 மே மாதம் 8 ம் தேதி முடிவுக்கு வந்தது. ஜெர்மனி படைகள், சோவியத் யூனியனிடம் சரணடைந்தன.இந்த போர் வெற்றியை தான் ரஷ்யா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 9 ம் தேதி கொண்டாடி வருகிறது. அந்த வகையில் வரும் மே 9 ம் தேதி நடக்கும்
கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யா சென்றார். ரஷ்யாவின் காசன் நகரில் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தார். இப்போது மீண்டும் மே 9 ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications