Unlock 3.0: ஜூலை 31க்கு பிறகு எந்த மாதிரி ஊரடங்கு.. முதல்வர்களுடன் 27ம் தேதி மோடி முக்கிய ஆலோசனை
டெல்லி: அடுத்த கட்ட ஊரடங்கு (unlock 3.0) மற்றும் கொரோனா நோய் பரவல் தடுப்பு தொடர்பாக ஜூலை 27ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களுடன் மட்டுமின்றி அன்றைய தினம் அனைத்து யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கு உத்தரவை மெல்லமெல்ல மத்திய அரசு தளர்த்திக் கொண்டு வருகிறது. அன்லாக் 1.0 என்ற பெயரில் கடந்த மாதம் தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தன.

முதல்வர்களுடன் ஆலோசனை
இந்த நிலையில் ஜூன் 16 மற்றும் 17ம் தேதிகளில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு அன்லாக் 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலை மாதம் 31ம் தேதி வரை கண்டைன்மெண்ட் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமலில் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

பல தளர்வுகள்
அன்லாக் 2.0 காலகட்டத்தில், கல்வி நிறுவனங்கள், சர்வதேச விமான பயணங்கள், மெட்ரோ ரயில், திரையரங்குகள், ஆடிட்டோரியம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், அதிகப்படியான மக்கள் கூட கூடிய இடங்கள் போன்றவற்றுக்கு தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது. மற்ற அனைத்துக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அந்தந்த மாநிலங்கள் தேவைப்படும் இடங்களில் ஊரடங்கை செயல்படுத்தின.
Recommended Video

அன்லாக் 3.0
இந்தியாவில் முன்பை விட தற்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மிக மிக அதிகரித்து காணப்படுகிறது. 12 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்தான் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல், எப்படியான புதிய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வர வேண்டும், அதாவது அன்லாக் 3.0 எப்படி இருக்க வேண்டும், என்பது பற்றி பிரதமர் நடத்த உள்ள ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications