இது ‘எய்ம்ஸ் வாரம்’.. 6 மருத்துவமனைகளை திறக்கும் பிரதமர் மோடி! லைட்டை அப்டியே மதுரைக்கு திருப்புங்க!
டெல்லி: இந்த வாரம் 'எய்ம்ஸ் வாரம்' எனச் சொல்லும் வகையில் நாடு முழுவதும் வரும் 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று (பிப்ரவரி 20) முதல் அடுத்த 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திறந்து வைக்கிறார். இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் நிகழ்ச்சியில் சம்பா மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி.

அதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 25ஆம் தேதி அன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி, பதிண்டா, ரேபரேலி மற்றும் கல்யாணி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஜம்மு எய்ம்ஸ், 1,660 கோடி ரூபாய் செலவில் 227 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 720 படுக்கைகள், 125 இடங்கள் மாணவர் சேர்க்கை கொண்ட மருத்துவக் கல்லூரி, 60 மாணவர் சேர்க்கை இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி, 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் பிளாக் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த எய்ம்ஸ் மருத்துமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு விடுதி, இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தங்கும் விடுதி, விருந்தினர் மாளிகை, ஆடிட்டோரியம், வணிக வளாகம் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பதோடு மேலும், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் பலவற்றிற்கும் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 25ஆம் தேதி குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி, பதிண்டா, ரேபரேலி மற்றும் கல்யாணி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்க இருக்கிறார் பிரதமர் மோடி.
இப்படியாக இன்று முதல் 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அதேசமயம், தமிழ்நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்காதது இங்கு விமர்சனங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015 பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை இந்தத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதுவரை சுற்றுச்சுவர் தவிர கட்டுமான பணிகளே தொடங்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டி 5 வருடங்கள் ஆகியும் இன்னும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்காத நிலையில் மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கிய்யுள்ளன.
தமிழகத்தின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது? மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டதா என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.












Click it and Unblock the Notifications