இருதரப்பிலும் நம்பிக்கை, மரியாதை மிக முக்கியம்.. சீன அதிபர் ஜின் பிங்- பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
டெல்லி: ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீனா அதிபர் ஜின் பிங்கை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பும் மரியாதை, நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் "நாம் திறந்த மனதுடன் விவாதிப்போம். நமது விவாதம் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றும் சீனா அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் 2020-ம் ஆண்டில் எழுந்த பிரச்சனைகளுக்கு தீர்வு, படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதற்கான சமீபத்திய ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி, வேறுபாடுகள் மற்றும் மோதல்களை முறையாக கையாள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.

மேலும் எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிர்வகிப்பதை மேற்பார்வையிடவும், எல்லைப் பிரச்சனைக்கு நியாயமான, பொறுப்புமிக்க மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கண்டறியவும் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இருதரப்பு உறவுகளை ஸ்திரப்படுத்தவும், மீண்டும் கட்டியமைக்கவும் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் இதர அதிகாரிகள் நிலையிலான பொருத்தமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்.
இரண்டு அண்டை நாடுகள் மற்றும் உலகின் இரண்டு பெரிய நாடுகள் என்ற முறையில் இந்தியா, சீனா இடையேயான நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் இணக்கமான இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் வளத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். இருதரப்பு உறவுகளை திட்டமிட்ட மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் சுட்டிக்காட்டினர். உத்தி சார்ந்த தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பைக் கண்டறிய வேண்டும் என்றும் பிரதமர் மோடி, ஜின் பிங் உறுதிபூண்டனர்.
அத்துடன் "உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கூறியது போல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முறைப்படி நாம் சந்திக்கிறோம். இந்தியா-சீனா உறவின் முக்கியத்துவம் நமது மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவிலும் முக்கியமானது என்று நம்புகிறோம். உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு நமது உறவுகள் முக்கியமானவை. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் ஆகியவை நமது உறவுகளின் அடிப்படையாகத் தொடர வேண்டும். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் விவாதிக்க இன்று நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் திறந்த மனதுடன் விவாதிப்போம். நமது விவாதம் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications