3-வது முறை பிரதமரான மோடி முதல் வெளிநாட்டு பயணம்! இத்தாலி ஜி 7 மாநாட்டில் நாளை பங்கேற்பு!
டெல்லி: 3-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி நாளை முதலாவது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். இத்தாலியில் நாளை தொடங்கும் ஜி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர்களும் பதவியேற்றதுடன் துறைகளில் பொறுப்பேற்றும் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் 3-வது முறையாக பிரதமரான பின்னர் நாளை முதலாவது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் நரேந்திர மோடி. தற்போது உலக நாடுகளின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் ஜி 7-ன் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது. இந்த ஆண்டு ஜி 7 உச்சி மாநாட்டை நடத்தும் இத்தாலி, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார். இத்தாலியின் அபுலியாவில் நாளை முதல் வரும் 15-ந் தேதி ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.
இம்மாநாட்டில் உலக நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள உக்ரைந் ரஷ்யா யுத்தம், இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இம்மாநாட்டினிடையே உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரதமர் மோடியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் , தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் தலைமையிலான குழுக்களும் ஜி 7 மாநாட்டுக்கு செல்கிறது. பிரதமர் மோடியின் இத்தாலி பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகும் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications