சண்டை நிறுத்தம்.. அமெரிக்கா அறிவிப்பது முதல்முறை.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க.. காங்கிரஸ்!
டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்திருப்பது இதுவரை இல்லாத ஒன்று என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் முகாமிட்டிருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் அழித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் பாகிஸ்தான் இந்திய எல்லையோர மாவட்டங்களில் தாக்குதலை நடத்தி வந்தது.

அதேபோல் பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததோடு, இந்தியா பதில் தாக்குதலையும் தொடுத்தது. நேற்றிரவு நடந்த சண்டையில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதோடு, விமான ஓடுதளங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. 3 விமான தளங்களை இந்தியா அட்டாக் செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்தது.
இதன்பின் அடங்கிய பாகிஸ்தான் உடனடியாக அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்தது. தொடர்ந்து மாலையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு தாக்குதலை கைவிட்ட இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டார். இதன் மூலமாக அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சக நிர்வாகிகள் சண்டை நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் தலையீட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்திருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் தலையீட்டை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்திருப்பது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத ஒன்று.
அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளை பிரதமர் மோடி கேட்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பஹல்காம் தாக்குதல் தொடங்கி கடந்த 18 நாட்களில் நடந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications