அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து.. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது புகார்!
டெல்லி: வங்கதேசத்தவர்கள் ஊடுருவல் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்துகள் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இதனையடுத்து மொய்த்ரா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி நடந்த நிகழ்வில் அம்மாநிலத்தின் கிருஷ்ணநகர் எம்.பியான மொய்த்ரா பங்கேற்றிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊடுருவல் பிரச்சினையை கையாளாததற்கும், திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை குற்றம் சாட்டியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

"ஊடுருவல்காரர்கள் பற்றி அவர்கள் மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். ஆனால் இந்தியாவின் எல்லை ஐந்து படைகளால் பாதுகாக்கப்படுகிறது. இது உள்துறை அமைச்சகத்தின் நேரடி பொறுப்பு. ஆக தோல்வி யாருடையது?" என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து மொய்த்ரா மீது கோட்வாலி காவல் நிலையத்தில் சந்தீப் மஜும்தார் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரியதாக வெடித்திருக்கும் நிலையில், மொய்த்ரா வெளிப்படுத்திய "வெறுக்கத்தக்க" மற்றும் " ஆட்சேபனைக்குரிய" கருத்துகள் திரிணாமுல் காங்கிரஸின் மனநிலையை பிரதிபலிக்கின்றன என்று பாஜக விமர்சித்திருக்கிறது.
இது குறித்து மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில், "பாஜக தனது 'ட்ரோல் செல்' மூலம் ஒரு பிரச்சினையை தேர்ந்தெடுத்து அதை சமூக ஊடகங்களில் வைரலாக்குகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications