சென்னையில் தயாராக இருந்த பாக். வீரர்கள்! கடைசி நேரத்தில் புறக்கணிப்பதாக அறிவிப்பு.. நடந்தது என்ன
டெல்லி: சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் கடைசி நேரத்தில் விலகுவதாக அறிவித்து உள்ளது.
44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று ஜூலை 28ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 10 வரை நடைபெற்ற உள்ளன. இதில் சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட்
இதற்காகக் கடந்த சில நாட்களாகவே பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். வெளிநாட்டு வீரர்கள் தங்க ஏதுவாக மாமல்லபுரத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடமும் போலீசார் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுவரை போட்டியின் ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டு உள்ளதாக வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் முதலில் ரஷ்யாவில் தான் நடக்க இருந்தது. இருப்பினும், உக்ரைன் போர் காரணமாக அங்கு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னரே சென்னையில் இந்தப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டிகளில் பாகிஸ்தானும் கலந்து கொள்ள இருந்த நிலையில், கடைசி நேரத்தில் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தது பாகிஸ்தான்.

அரசியலாக்கி உள்ளது
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியதை இந்தியா கடுமையாக விமர்சித்து உள்ளது. இதனைத் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட வெளியுறவுத் துறை அமைச்சகம், சர்வதேச நிகழ்ச்சியைப் பாகிஸ்தான் அரசியலாக்குவதாகவும் சாடி உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டோம் எனப் பாகிஸ்தான் திடீரென முடிவு எடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

துரதிர்ஷ்டவசமானது
மதிப்புமிக்க சர்வதேச நிகழ்வைப் பாகிஸ்தான் அரசியல் ஆக்கி உள்ளது. அவர்கள் அணி வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்துவிட்ட பிறகு இப்படியொரு அறிவிப்பைப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தான் தேவையில்லாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.

என்ன காரணம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி இந்தியா முழுவதும் எடுத்து வரப்பட்டது. அதன்படி காஷ்மீரிலும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாகிஸ்தான் கடைசி நிமிடத்தில் போட்டியில் இருந்து விலகி உள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளன. இப்போதும் அப்படித்தான். இனி எப்போதும் அப்படித்தான் இருக்கும்" என்றார்.
Recommended Video

கடைசி நேரத்தில்
செஸ் ஒலிம்பியாட் தொடக்கப் போட்டிகள் இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலகலாமாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்கப் பாகிஸ்தான் வீரர்கள் தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் போட்டியில் பங்கேற்கப்போவது இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications